ஜூன் 10-ல் ராஜ்யசபா தேர்தல்: இந்த 3 பேருக்கும் திமுக எம்.பி. சீட் கொடுத்தது ஏன்? பின்னணி என்ன?
சென்னை: திமுகவின் 3 ராஜ்யசபா வேட்பாளர்களை அக்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். ஏற்கனவே எம்.பி.யாக உள்ள கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், வழக்கறிஞர் கிரிராஜன் மற்றும் தஞ்சாவூர் சு. கல்யாணசுந்தரம் ஆகியோர் திமுகவின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவின் ராஜ்யசபா எம்.பிக்களான ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது. இதேபோல் அதிமுகவில் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் விஜயகுமார் பதவிகாலமும் நிறைவடைகிறது.

இதனால் தமிழகத்தில் மொத்தம் 6 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 10-ந் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ந் தேதி தொடங்க உள்ளது. திமுக, அதிமுகவில் யார் யாருக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்பது விவாதப் பொருளாக இருந்து வந்தது.
இந்நிலையில் திமுகவில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சு.கல்யாணசுந்தரம், ராஜ்யசபா எம்.பி. கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் வழக்கறிஞர் கிரிராஜன் ஆகியோரை ராஜ்யசபா எம்.பி. வேட்பாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மற்றொரு இடத்தை திமுக தமது கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கி உள்ளது.
கடந்த ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானவர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார். திமுகவின் மூத்த கட்சி முன்னோடிகளில் ஒருவரான நாமக்கல் கே.ராமசாமியின் பேரன் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார். திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கு மிக நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அத்துடன் திமுக தலைமைக்கு மிக நெருக்கமானவர் என்பதால் முதல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரது பதவி காலம் குறுகியதாக இருந்ததால் இப்போது மீண்டும் ராஜ்யசபா எம்.பி. சீட் கிடைத்துள்ளது.
திமுகவின் சட்டத்துறை செயலாளர் என்ற அடிப்படையில் கிரிராஜனுக்கு ஏற்கனவே தேர்தல்களில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கி இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி விவகாரங்களை கையாளக் கூடியவர். தற்போதைய அமைச்சர் சேகர்பாபுவுக்கும் மிக நெருக்கமானவர். இந்த அடிப்படையில் விசுவாசத்திற்கான பரிசாக மீண்டும் கிரிராஜனுக்கு ஒரு வாய்ப்பு... அதாவது ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்திருக்கிறது.
திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலில் யூகத்தில் இடம்பெறாதவர் தஞ்சை சு.கல்யாணசுந்தரம். 1950களின் இறுதியில் இருந்து திமுகவின் தீவிரமான தொண்டராய் கட்சிப் பணி தொடங்கியவர். தமது 19 வயதில் ஆரியபடை வீடு ஊராட்சி மன்ற உறுப்பினரானவர். கும்பகோணம் ஊராட்சியின் முதல் பெருந்தலைவராக இருந்தவர் கல்யாணசுந்தரத்தின் தந்தை சுந்தரராஜ். திமுகவில் பல்வேறு கட்சிப் பணிகளை ஆற்றியவர். 1989-ல் மூப்பனாரை எதிர்த்து பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1998-ல் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர். தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பதவியில் இருந்து வருகிறார். சீனியர் கோட்டாவில் இம்முறை தஞ்சை சு.கல்யாணசுந்தரத்துக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications