அமைச்சர் சேகர்பாபுவை போனில் அழைத்து பாராட்டும் பாஜக தலைவர்கள்.. ஏன் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!
சென்னை : பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலர் தன்னை போனில் அழைத்துப் பாராட்டியதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தமிழக அரசியல் களம் தகித்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைவிட பாஜக கடுமையாக ஆளுங்கட்சியான திமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.
பாஜக தலைவர்கள், திமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் நிலையில், தன்னை பாஜக தலைவர்கள் பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

பாஜக vs திமுக
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், பாஜக, அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அண்ணாமலை, மாநிலத் தலைவரான பிறகு நாள்தோறும் பாஜகவினர் திமுக அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர். திமுக அமைச்சர்களும் அதற்கு எதிர்வினையாற்றி வருவதால், அரசியல் களத்தில் அனல் தகிக்கிறது.

அரசியல் அனல்
இந்து கோயில்கள் தொடர்பாகவும் அவ்வப்போது சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது பாஜக. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை எச்.ராஜா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். அவர்களுக்கு துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து வருகிறார்.

பாஜகவினர் போனில் அழைத்து
இந்நிலையில் தான், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தன்னை போனில் தொடர்பு கொண்டு தனது பணிகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. திமுக அரசை கடுமையாக விமர்சித்து பாஜகவினர் பொது வெளியில் பேசி வரும் நிலையில், தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக அமைச்சர் தெரிவித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதுமே எதிர்மறை கருத்துகளை சொல்பவர்கள் கூட
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காகத் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் சதுர அடிக்கு மேற்கூரை அமைத்துள்ளோம். ஃபேன், லைட், குடிநீர் மற்றும் மருத்துவ வசதி என அனைத்தும் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. எப்போதும் எதிர்மறை கருத்துகளைக் கூறும் பாஜக முக்கிய தலைவர்கள் கூட என்னை தொடர்பு கொண்டு திருச்செந்தூரில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தனர்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications