வெளிநாடு & அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம்! மீண்டும் பதவி கொடுத்த அண்ணாமலை
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமுக்கு, வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக பதவியை வழங்கி உள்ளார் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை..
தமிழக பாஜகவின் அதிரடி பேச்சுகளுக்கு பெயர் போனவர் நடிகை காயத்ரி ரகுராம். நடிகையாகவும் நடன இயக்குனராகவும் தமிழ் துறையில் நன்கு அறியப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்ட அவர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

காயத்ரி ரகுராம் பாஜக
அதிரடி பேச்சுகள் மூலம் விரைவில் அரசியலிலும் பிரபலமாகத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையிலும் சிக்கினார். அதாவது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கடும் சர்ச்சைக்கு ஆளான அவர் சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் மறு பிரவேசம் செய்தது போல மீண்டும் தீவிர அரசியலில் காலடி வைத்தவர் சட்டமன்ற தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜக அண்ணாமலை
கலாச்சாரப் பிரிவு அல்லாமல் கட்சியில் தனக்கு முக்கிய பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் வகித்து வந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 44 பேர் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

கட்சியிலிருந்து நீக்கம்
அதில் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டார். பதவி பறிக்கப்பட்ட நிலையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி என குறிப்பிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழக பாஜகவின் கலை கலாச்சார பிரிவினுடைய மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் தனது அணி நிர்வாகிகள் சிலரை அண்ணாமலை அனுமதி இல்லாமல் நீக்கியதாக கூறப்பட்டது.

மீண்டும் நியமனம்
காயத்திரியின் இந்த அறிவிப்பு செல்லாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்ட நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராம் இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாகவும் கூறப்பட்டது ஆனால் எந்த கருத்தையும் கூறாமல் இருந்து அமைதி காத்து வந்தார் காயத்ரி ரகுராம். இந்த நிலையில்தான் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications