கட்சிக்கு வாங்க... குஷ்புவுக்கு 14 நாட்களுக்கு முன்னரே பாஜக அனுப்பிய 'திருக்குறள்' தூது!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் நடிகை குஷ்பு இணைய வேண்டும் என வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்னர்தான் அக்கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சாரி திருக்குறளை மேற்கோள்காட்டி தூது விட்டிருந்தார். இப்போது பாஜகவில் குஷ்பு இணைய இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இன்று பிற்பகல் இணைய உள்ளார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் குஷ்பு கட்சியில் இணைகிறார். அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அதிகாரியும் ஒரு பத்திரிகையாளரும் பாஜகவில் இணைகிறார்களாம்.
காங்கிரஸுக்கு குட்பை... பாஜகவில் நடிகை குஷ்பு இன்று பிற்பகல் இணைகிறார்?
பாஜக தலைவர்கள் அழைப்பு
பாரதிய ஜனதா கட்சியில் பாஜக இணைய வேண்டும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை வலியுறுத்தி இருந்தார். பின்னர் பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து அவருக்கு அழைப்பு விடுத்தனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை குஷ்பு ஆதரித்ததும் சர்ச்சையானது. பின்னர் தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் குஷ்புக்கு கட்சியில் சேர அழைப்பு விடுத்தார்.
குஷ்புவுக்கு தலைவர்கள் வாழ்த்து
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி குஷ்பு பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வழக்கம் போல பாஜக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால் பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்ட ஒரு ட்வீட் பெரும் சர்ச்சையானது. அதாவது திருக்குறளை மேற்கோள் காட்டி ஆசீர்வாதம் ஆச்சாரி பதிவிட்டிருந்தார்.
ஆச்சாரி சொன்ன குறள்
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் என்பதுதான் அந்த திருக்குறள். அதாவது தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார் என்பது இந்த திருக்குறளுக்கு உரை.
நிறைவேறும் குறள் விடு தூது
சரியான இடத்துக்கு நீங்க வந்துவிட்டால் உங்களை வெல்ல யாராலும் வெல்ல முடியாது என்பதுதான் இந்த குறளின் பொருள். இதனைத்தான் அன்று ஆசீர்வாதம் ஆச்சாரி குறிப்பிட்டு குஷ்புவுக்கு தூது அனுப்பி இருந்தார். இன்று அதை நிறைவேற்றும் வகையில் பாஜகவில் இணைகிறார் குஷ்பு.