தமிழகத்தில் முதல்முறையாக.. உறுப்புகளை தானம் செய்து.. இருவருக்கு உயிர் தந்த 18 மாத பிஞ்சு.. நெகிழ்ச்சி
சென்னை: வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த ஆந்திராவை சேர்ந்த 18 மாத ஆண் குழந்தையின் உடல் உறுப்புக்கள் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 4 மாத பெண் குழந்தை ஒன்றும் 19 வயது இளம்பெண் ஒருவரும் உயிர் பிழைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 18 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுவது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது.
ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்து 18 மாதங்கள் ஆன நிறைவடைந்த நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தாண்டவம் ஆடும் வைரஸ் பாதிப்பு.. கொரோனா என்ற வார்த்தையை கூட உச்சரிக்காத ஜி ஜின்பிங்! கோபத்தில் மக்கள்
ஆனால் குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் எனவே உடனடியாக பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து குழந்தை நெல்லூரிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 2ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் நாளுக்கு நாள் குழந்தையின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது.
இரண்டு பேருக்கு மறுவாழ்வு
இதனையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத பெற்றோர்கள் கடும் வேதனையடைந்தனர். பின்னர் பெற்றோரின் அனுமதியுடன் குழந்தையின் உறுப்புகளை தானமாக வழங்க மருத்துவர்கள் சம்மதம் பெற்றுள்ளனர். அதன்படி குழந்தையின் கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 மாத பெண் குழந்தைக்கும், இரண்டு சிறுநீரகங்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது இளம்பெண்ணுக்கும் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர்
இவ்வாறு உறுப்பு தானகமாக பெறப்பட்டு மற்றவர்களுக்கு பொருத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் குழந்தைகளிடமிருந்து உறுப்புகள் தானமாக பெறப்படுவது அரிதாகவே இருக்கிறது. 18 மாத குழந்தையிடமிருந்த உறுப்புகள் தானமாக பெறப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆந்திராவில் பிறந்த குழந்தை தமிழ்நாட்டை சேர்ந்த இருவருக்கு மறுவாழ்வு அளித்திருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி, ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன், மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு
ஒட்டுமொத்த இந்திய அளவில் உறுப்புமாற்று சிகிச்சையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளோர்களுக்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது. தமிழ்நாட்டில் இதற்காக 'விடியல்' எனும் முழு தானியங்கி செயல்முறையானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இவ்வாறு தானியங்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் மாநிலமும் தமிழ்நாடுதான். தற்போது வரை இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1,559 கொடையாளர்களிடமிருந்து 5,687 உறுப்புக்களும், 3,629 திசுக்களும் தானமாக பெறப்பட்டிருக்கின்றன.
இந்தியா
உடல் உறுப்புமாற்று சிகிச்சையானது 1960களிலிருந்ததான் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஆனால் உறுப்பு கொடையாளர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைவாக இருப்பதால் உறுப்பு செயலிழந்தோருக்கு இதனை பொருத்த முடியவில்லை. சர்வதேச அளவில் 10 லட்சம் பேரில் சுமார் 20-30 பேர் வரைதான் உறுப்புகளை கொடையாக அளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். அதாவது இந்தியாவை பொறுத்த அளவில் 10 லட்சம் பேரில் சுமார் 0.5 பேர் மட்டுமே உறுப்புகளை தானமாக அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெகிழ்ச்சி
சில வருடங்களுக்கு முன்பு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டரை வயது குழந்தையின் உறுப்புகள் தானம் பெறப்பட்டதே, இதுவரை மிக குறைந்த வயது உறுப்பு கொடையாளராக கருதப்பட்டு வந்த நிலையில், இப்போது 18 மாத குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளது... தமிழகத்தில் மிக குறைந்த வயது உறுப்பு கொடையாளர் லிஸ்ட்டில், இந்த ஆந்திர மாநில குழந்தை முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.. அக்குழந்தையின் பெற்றோருக்கு, பலரும் தங்களது பாராட்டு நிறைந்த கவலையை தெரிவித்து வருகின்றனர்.