#31YearsofInjustice .. தொடங்கியது பிரச்சாரம்.. பேரறிவாளன் விடுதலை எப்போது? பரபரக்கும் ட்விட்டர்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஒரு சின்ன விசாரணை தொடர்பாக பேரறிவாளனை கூட்டி சென்று இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அதாவது 31வது வருடம் தொடங்கி விட்டது. இந்நிலையில் பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி ட்விட்டரில் பிரச்சாரம் நடக்கிறது.
இந்த விவாதத்தில் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் பங்கேற்றார்கள். தொடர்ந்து பிரச்சாரம் நடந்து வருகிறது. பலரும் பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி ட்விட்டரில் பேசி வருகிறார்கள்.
அற்புதம்மாள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஒரு சின்ன விசாரணை என்று தொடர்பாக பேரறிவாளனை கூட்டி சென்று இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. 30 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார் பேரறிவாளன். 19 வயதில் அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்து 30 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார். மரண தண்டனை கைதியாகவும் இருந்துள்ளார். இது எல்லோருக்கும் தெரியும்.
பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு - சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
தவறான வாக்குமூலம்
இந்த வழக்கில் தீர்ப்பு வந்த போது நான் சொன்னேன். என் பையனுக்கும் , இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் சிக்க வைத்துள்ளனர். ஆனால் யாரும் நம்பவில்லை. ஆனால் பின்னாளில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரி தியாகராஜன் கூறுகையில், நான் பேரறிவாளனிடம் வாங்கிய வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்திருந்தால் இன்றைக்கு இந்த தண்டனையே இல்லை. அவருக்கும் ராஜீவ் காந்தி கொலைக்கும் சம்பந்தம் இல்லை. அவர் சொன்னதுடன் இல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
நிம்மதி இல்லை
சரி எல்லாம் வெளியாகிவிட்டது. என் மகன் விடுதலையாகிவிடுவான் என்று நம்பினேன். ஆனால் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 30 ஆண்டு சிறை வாழ்க்கை பேரறிவாளனுக்கு பல விதமான நோய்களை கொடுத்துள்ளது. அதற்கான தொடர் மருத்துவம் அவனுக்கு கிடைக்கவில்லை. சில சமயங்களில் கிடைக்கிறது. ஆனால் தொடர்ந்து கிடைக்கவில்லை. சிறை வாழ்க்கையால் என் மகனின் நிம்மதி சந்தோஷம் எல்லாமே போய்விட்டது எங்கள் குடும்பத்தின் நிம்மதியும் போய்விட்டது" என்று வேதனை தெரிவித்தார்.
ட்விட்டர் பதிவு
அற்புதம்மாள் தனது ட்விட்டர் பதிவில், "தொடர் ஓட்டம்,வரலாற்றில் இல்லா போராட்டம், என பலரும் எனை சுட்டி பேசும்போது, மூப்படைந்த என் ரத்த ஓட்டமும் தேய்ந்துபோன என் எலும்புகளும் உயிர்வலியுடன் வேகமெடுக்கும். இப்போராட்டத்தின் முடிவு நீதியின் வெற்றியாகவேண்டும் என ஒற்றை இலக்கே காரணம்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகை
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை அறிவித்தும் அவரை விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் மாளிகை தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடுவது கண்டிக்கத்தக்கது.
7 தமிழர்கள்
7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி தமிழக ஆளுநருக்கு உண்டு என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 07.09.2018 அன்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், நாம் தொடர்ந்து தட்ட வேண்டியது சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையின் கதவுகளைத்தானே தவிர, டெல்லி குடியரசு மாளிகையின் கதவுகளை அல்ல" என்று கூறியுள்ளார்.