'சமூக நீதிக்கு எதிரானவர்'.. தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்ப அழைக்கணும்.. ஜவாஹிருல்லா ஆவேசம்
சென்னை: தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நீட்தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பி இருக்கும் தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நீட் விலக்கு மசோதா
தமிழகத்தில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. இதனால் தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வழிவகுக்கும் வகையில் அனைத்து கட்சிகள் ஒப்புதலுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழக ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் தமிழக ஆளுநர் இதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்
ஆளுநர் காலம் தாழ்த்துவது குறித்து அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே நேற்று தமிழக அரசு கொண்டு வந்து அனுப்பிய நீட்தேர்வு மசோதாவை தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் திருப்பி அனுப்பினார். இது தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநரின் செயலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது ஏற்கத்தக்கதல்ல
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வழிவகுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கோரி, ஆளுநருக்கு தொடர்ந்து தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில் ஆளுநர் இன்று நீட் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

சமூக நீதிக்கும் எதிரானது
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு எதிரானது என்ற கருத்தை வெளிப்படுத்தி ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும். அவரது முடிவு ஜனநாயகத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும்.
Recommended Video

திரும்ப அழைக்க வேண்டும்
தமிழக மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விஷயத்தில் ஆளுநரின் இந்த முடிவு தவறான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என்று கோருகின்றேன்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications