பெசன்ட் நகர் பீச்சில்.. நள்ளிரவில் பாடிய கானா பாடகர்.. டக்னு கத்திரிகோல்.. சென்னை ஓட்டேரி பெண் யார்?
சென்னை: பெசன்ட்நகர் பீச்சில் நடந்த சம்பவம் சென்னைவாசிகளை உறைய செய்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் சந்தேகத்திற்கிடமானவர்களிடம் விசாரணையை மும்முரமாக நடத்திவருகிறார்கள். என்ன நடந்தது?
சென்னை வேளச்சேரி அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (எ) ராஜன்.. இவருக்கு 25 வயதாகிறது.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர் ஆவார்.. இவருக்கு கானா பாடல் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால், ஆட்டோ சவாரி இல்லாத நேரங்களில் அடிக்கடி கானா பாடி கொண்டிருப்பாராம்.

மனைவி: இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்துவிட்டார்.. தற்போது தன்னுடைய அம்மா லட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு போவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு பெசன்ட்நகருக்கு ஜெயராஜ் வந்துள்ளார்.
ஆனால், அன்றைய தினம் நள்ளிரவு 1 மணிக்கு, பெசன்ட்நகர், எலியட்ஸ் பீச்சில் ஜெயராஜ் சடலமாக கிடந்தார்.. அவரது வயிற்றில் கத்திரிக்கோல், பீர்பாட்டிலால் குத்தப்பட்டிருந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் தகவல் தந்தனர்.. இதையடுத்து, சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஜெயராஜின் சடலத்தை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
சிசிடிவி கேமரா: பிறகு, ஜெயராஜை யார் கொன்றார்கள்? என்ன காரணம்? என்பது குறித்த விசாரணையையும் மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதேபோல, ஜெயராஜின் செல்போன் பதிவுகளை வைத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.. அப்போதுதான், ஓட்டேரியை சேர்ந்த பெண் ஒருவருடன், ஜெயராஜ் கடைசியாக பேசியிருப்பது தெரியவந்தது.
எனவே, அந்த ஓட்டேரி பெண்ணை, சாஸ்திரி நகர் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரித்தனர்... அப்போதுதான், இது பாட்டு பாடுவதில் ஏற்பட்ட மோதல் என்று தெரியவந்தது.
கானா பாடல்: அதாவது, பெசன்ட்நகர் திருவிழாவில் பங்கேற்க அம்பத்தூர், ஓட்டேரி ஆகிய 2 பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள்.. ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர்கள் ஏற்கனவே தனக்கு அறிமுகமானவர்கள் என்பதால், ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் அவர்களுடன் சேர்ந்து கானா பாடல்களை பாடியுள்ளார்.
ஜெயராஜ் பாடிக் கொண்டிருக்கும்போதே, அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்களும் கானா பாடல்களை பாட ஆரம்பித்துவிட்டார்களாம்.. இதனால் 2 தரப்பினருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.. பிறகு, தகாத வார்த்தைகளில் பாடி கிண்டலடித்திருக்கிறார்கள். இறுதியில் 2 தரப்பினருக்குமிடையே வாய்த்தகராறு முற்றி, அடிதடியிலும் இறங்கியிருக்கிறார்கள்..
கத்தரிக்கோல்: அப்போது ஆத்திரமான அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள், கானா பாடிய ஆட்டோ டிரைவர் ஜெயராஜை கத்திரிக்கோல் மற்றும் பீர்பாட்டிலால் சரமாரி குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறார்கள்..
இவ்வளவு தகவலும் சாஸ்திரி நகர் போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து, ஓட்டேரி, அம்பத்தூர் பகுதிகளை சேர்ந்த 6 பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து, பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.. அதேசமயம், ஜெயராஜ் கொலையில் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறார்கள். ஓட்டேரி பெண் யாரென்று தெரியவில்லை.. ஜெயராஜ் இவரிடம்தான் கடைசியாக பேசியிருக்கிறார்.. எனவே, விசாரணை மும்முரமாக நடந்து வருகிறது












Click it and Unblock the Notifications