அடடா மழைடா.. அடை மழைடா.. எடுடா குடத்தை!
Recommended Video
சென்னை: சின்ன சின்ன தூறல் என்ன என பாடிய மழையை ரசித்த காலம் போய் மழையைப் பார்த்தவுடன் அடடா மழைடா எடுடா குடத்தை என்ற நிலைக்கு வந்திருக்கிறோம் நாம்.
தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் நேற்று காலையில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.
நேற்றிரவு மட்டும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் அதிகனமழை பெய்துள்ளது. இன்று சாலை முழுவதும் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாமழை
சொட்டுத் தண்ணீருக்காக குடத்தைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாகச் சென்ற மக்களுக்கு இந்த மழை ஒரு வரப்பிரசாதம். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் சென்னை காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் காலிக்குடங்களோடு தெருத்தெருவாக தண்ணீருக்காக அலைந்தனர்.
வேலூரிலிருந்து வந்த தண்ணீர்
தண்ணீர் இல்லாமல் ஓஎம்ஆரில் உள்ள ஐ.டி கம்பெனிகள் மூடப்பட்டன. பிறகு நம் தமிழக அரசின் முயற்சியால் வேலூர் மாவட்டத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்குத் தரப்பட்டது. எத்தனை யாகங்கள் எத்தனை வேண்டுதல்கள் மழையை வேண்டி.
சிறந்த நாள்
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று முதல் இன்னும் இரண்டு நாட்களுக்குச் சென்னையில் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீரின்றி அமையாது உலகு என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறியுள்ளார்.
மழையை சேமிப்போம்
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள ஆறுகள் குளங்கள் மழையால் நிரம்பத் தொடங்கியுள்ளன. நாமும் நம் பங்குக்கு மழை நீரைச் சேமித்தால் தானே எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சமில்லாமல் வாழ முடியும்.
சேமிப்பா.. ரசிப்பா
அதனால் இப்போதெல்லாம் மழையைப் பார்த்தால் முத்துக்கு முத்தாக என் சொத்துக்குச் சொத்தாக என முத்து முத்தாக வரும் மழைநீரைச் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.உங்கள் வீட்டில் இருக்கும் குடங்கள் மற்றும் பெரிய பெரிய டிரம்களில் மழைநீரைச் சேமியுங்கள்.
வாய்ப்புகளை விடாதீங்க
உங்கள் வீட்டு மொட்டை மாடியில் டேங்க் இருந்தால் அதில் மழைநீரைச் சேமிக்கலாம். ஓட்டு வீட்டிலோ அல்லது குடிசை வீட்டிலோ இருந்தால் சிறு குழாய் மூலமாக மழைநீர் நிலத்தில் படுமாறு செய்து மழைநீரைச் சேமிக்கலாம். இன்று சென்னைக்கு மிகச் சிறந்த நாள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வரும்போதே சேமிப்போம்
இதற்குப் பிறகு இவ்வளவு மழை வருமா என நமக்குத் தெரியாது அதனால் எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்பது போல் அடிக்கின்ற மழையில் தண்ணீர் சேமித்த மட்டும் லாபம் என உறுதிக் கொள்வோம்.
ஊக்கப்படுத்துவோம்
எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் நம்மால் ஏனோ மழையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாம் மட்டும் மழைநீரைச் சேமிக்காமல் நம் குழந்தைகளுக்கும் மழைநீரின் அவசியத்தைக் கூறி அவர்களையும் சேமிக்கப் பழக்கப்படுத்துவோம்.
- ஜி.உமா