பெண்ணின் வீட்டில் டாக்டர் சுப்பையா சிறுநீர் கழித்த வழக்கு ரத்து.. திடீர் ட்விஸ்ட் - நடந்தது என்ன?
சென்னை : பக்கத்து வீட்டுப் பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான விவகாரத்தில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இரு தரப்பிலும் சமரசமாக செல்வதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மருத்துவர் சுப்பையா வசிக்கும் குடியிருப்பில் பெண்ணுடன் தகராறு செய்தது குறித்த அந்தப் பெண் புகார் தெரிவித்த நிலையில், அவரது வீட்டின் முன்பாக டாக்டர் சுப்பையா சிறுநீர் கழிக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
சிறுநீர் கழித்த சுப்பையா கைது.. புகாரளித்தவருக்கு அடுத்தடுத்து மிரட்டல்.. பாதுகாப்பு கோரும் பாலாஜி.!
கார் பார்க்கிங் பிரச்சனை
சென்னை நங்கநல்லூர் பகுதியில் தனியார் குடியிருப்பில் வசித்து வரும் மருத்துவர் சுப்பையா, ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக இருந்தவர். இவருக்கு அதே குடியிருப்பில் வசித்துவரும் 62 வயதான பெண்மணி ஒருவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான கார் பார்க்கிங் இடத்தில் தொடர்ந்து மருத்துவர் சுப்பையா காரை நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சிறுநீர் கழித்த டாக்டர் சுப்பையா
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வயதான பெண்மணியின் வீட்டு முன்பு குப்பைகளைக் கொட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதமாக தொந்தரவுகளை கொடுத்துள்ளார் மருத்துவர் சுப்பையா. உச்சபட்சமாக அந்தப் பெண்ணின் வீட்டிற்கு முன்பு சிறுநீர் கழித்தார். சுப்பையா சண்முகம், அண்டைவீட்டுப் பெண்மணி வீட்டின் முன்பு சிறுநீர் கழிக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்குப்பதிவு
இதுதொடர்பாக அந்த பெண்மனிக்கு ஆதரவாக அதே குடியிருப்பில் வசித்து வந்த உறவினர் பாலாஜி விஜயராகவன் ஆதம்பாக்கம் போலிஸில் புகார் அளித்தார். டாக்டர் சுப்பையா அந்தப் பெண்ணுக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுத்ததும், சிறுநீர் கழித்ததும் உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து ஆதம்பாக்கம் போலிஸார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சுப்பையா கைது
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஆதம்பாக்கம் போலீசார் மருத்துவர் சுப்பையாவை சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாகக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த புகாரை அளித்த பெண்மணி மற்றும் அவரது உறவினர், சுப்பையாவால் மிரட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கு ரத்து
இந்நிலையில், பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான விவகாரத்தில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இரு தரப்பிலும் சமரசமாக செல்வதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.