ஆபாச வீடியோ.. குடும்ப பெண்களுக்கு அனுப்பி மிரட்டிய கடன் "ஆப்".. ஐடி பொறியாளர் விபரீத முடிவு
சென்னை: தனது புகைப்படத்தை கடன் செயலிகள் மார்ஃபிங் செய்து தாய் மற்றும் சகோதரிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியதால் அவமானம் அடைந்த ஐ.டி. இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடன் செயலிகளின் இத்தகைய செயல்களால் நாடு முழுவதும் தற்கொலை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த கடன் செயலிகளை நிர்வகிப்பவர்கள், இதற்காக பணியாற்றுவோரை கண்டுபிடித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
7 படிகளில் கொலு.. லட்சுமி கடாட்சம்.. அறுசுவை உணவு.. கலிபோர்னியாவில் நவராத்திரி விழா கொண்டாட்டம்
உயிரைக் குடிக்கும் கடன் செயலிகள்..
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி எந்த அளவுக்கு நன்மை என நினைக்கிறோமோ, அதே அளவுக்கு அதில் ஆபத்தும் இருக்கிறத என்பதை மறந்துவிடக் கூடாது. நமது வங்கிக்கணக்கில் இருந்து நமக்கே தெரியாமல் பணத்தை திருடுவது; செல்போன்களை 'ஹேக்' செய்து ரகசிய தரவுகளை எடுப்பது என இதற்கு பல உதாரணங்களை கூறலாம். அந்த வகையில், தற்போது 'கடன் செயலி' என்ற பெயரில் இது புது அவதாரத்தை எடுத்துள்ளது. நினைத்த நேரத்தில் உடனடியாக இந்த செயலிகள் கடன் கொடுத்துவிடும். ஆனால், அந்தக் கடனுக்கு மேல் வட்டி போடுவதுடன், பணத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் கட்ட தவறினால் கடன் வாங்கியவரின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து புகைப்படத்தையும், வீடியோக்களையும் வெளியிடும். இதனால் அவமானம் தாங்காமல் சமீபகாலமாக பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
மென்பொருள் பொறியாளர்
சென்னை கே.கே. நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்தவர் நரேந்திரன் (23).பட்டப்படிப்பை முடித்த இவர், பெருங்குடியில் உள்ள ஒரு பிரபல ஐ.டி. நிறுவனத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அவசர தேவைக்காக ரூ.5 ஆயிரத்தை நண்பர்களிடம் கடனாக கேட்டார். ஆனால் அவருக்கு யாரும் கடன் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போது ஆன்லைன் கடன் செயலிகள் குறித்து கேள்விப்பட்ட நரேந்திரன், அதில் ஒரு செயலியை செல்போனில் டவுன்லோடு செய்தார். அடுத்த கணமே அவரது வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தப்பட்டது.
கடன் செயலி ரூபத்தில் வந்த எமன்
கிடைத்த நேரத்தில் பணம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த நரேந்திரன், பின்னர் இதுபோன்ற கடன் செயலிகளை ஒவ்வொன்றாக டவுன்லோடு செய்து அதில் கடன் பெறுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டார். இந்நிலையில், கடந்த மாதம் சில கடன் செயலிகளுக்கு உரிய நேரத்தில் அவர் பணத்தை திரும்பத் தராததால் அவற்றில் பணிபுரியும் ஆட்கள், நரேந்திரனை செல்போனில் தொடர்புகொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டினர். இதனால் பயந்துபோன அவர், வேறு வேறு செயலிகளிடம் இருந்து கடன் பெற்று, முந்தைய கடன்களை அடைக்க தொடங்கினார். ஒருகட்டத்தில், 21 செயலிகளிடம் இருந்து அவர் ரூ.75 ஆயிரத்தை கடனாக பெற்றிருந்தார்.
ஆபாச வீடியோக்கள்..
இவற்றில் 10 செயலிகளிடம் இருந்து தான் பெற்ற கடனை நரேந்திரன் அடைத்து விட்டார். ஆனால் மீதமுள்ள செயலிகளிடம் இருந்து பெற்ற கடனை அவரால் உடனடியாக அடைக்க முடியவில்லை. அதுவரை அவரை செல்போன் மூலம் மிரட்டி வந்த அந்தக் கடன் செயலிகள் தங்களின் வேறு விதமான மிரட்டலை காட்டத் தொடங்கின. அதன்படி, நரேந்திரனின் செல்போனில் உள்ள அவரது புகைப்படங்களை எடுத்து அதனை மார்ஃபிங் செய்து ஆபாச வீடியோக்களையும், புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பின. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் நரேந்திரன்.
தற்கொலை
இந்நிலையில், அடுத்த சில நாட்களில் அவருடைய செல்போன் தொடர்பு எண்களுக்கும் வாட்ஸ் அப்பில் அவரது ஆபாச மார்ஃபிங் புகைப்படங்களை அந்த செயலிகள் அனுப்பத் தொடங்கின. இவ்வாறு கடந்த வாரம் அவரது தாயாருக்கும், சகோதரிக்கும் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை அந்த செயலிகள் அனுப்பின. இதுகுறித்து தெரியவந்த நரேந்திரன், மிகுந்த அவமானம் அடைந்தார். வீட்டில் யாருடனும் பேசுவதையும், அலுவலகத்துக்கு செல்வதையும் கூட அவர் தவிர்த்து வந்தார். இந்த சூழலில், நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நரேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.