லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக “பர்கர், சாண்ட்விச்” தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
சென்னை: படப்பையில் உள்ள கோயில் ஒன்றில் பிரசாதமாக சாண்ட்விச், பர்கர் போன்ற நவீன உணவு வகைகள் வழங்கப்பட்டு வருவது அனைத்து தரப்பு பக்தர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
பொதுவாகவே கோயில்களுக்கு பக்தியின் மிகுதியின் காரணமாகவும் அங்கு பரிமாறப்படும் பிரசாதங்களுக்காகவும் பக்தர்கள் படையெடுப்பது வழக்கம்.
கோயில்களில் சாமிக்கு படைக்கும் உணவு பொருட்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

கோயில் பிரசாதம்
பாய்ஸ் படத்தில் வரும் செந்திலைபோல் எந்தெந்த கோயில்களில் எந்த வேளையில் எந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும் என்ற பட்டியலுடனே சுற்றுபவர்கள் நிஜத்தில் கூட இருப்பதற்கு வாயுப்புகள் உண்டு. அந்த அளவுக்கு அனைத்து வேளைகளிலும் ஏதாவது ஒரு கோயிலில் பிரசாதம் வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

நவீன பிரசாதம்
பொதுவாகவே கோயில் பிரசாதம் என்றால் புளியோதரை, பொங்கல், சோறு, லட்டு, சுண்டல், வாழைப்பழம், வடை, பஞ்சாமிர்தம் போன்றவைதான் வழங்கப்படும். ஆனால், சென்னையை சேர்ந்த ஒரு கோயில் பிரசாதத்தில் அப்டேட்டாகி பொங்கல், சோறு, லட்டு வழங்காமல் இளைஞர்கள், சிறுவர்களுக்கு பிடித்த பர்கர், சாண்ட்விச், பிரவுனி போன்றவற்றை வழங்குகிறது.

எங்கிருக்கிறது கோயில்?
சென்னையில இப்படி ஒரு கோயிலா.. எங்கே இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. படப்பையில் அமைந்து இருக்கும் ஜெய துர்கா பீடம் என்ற கோயிலில்தான் நாம் மேல்சொன்ன வகை வகையான உணவுகளை பிரசாதமாக வழங்கி வருகின்றனர். இந்த கோயில் நிறுவனரான கே. ஸ்ரீஸ்ரீதர் ஒரு மூலிகை புற்றுநோயியல் மருத்துவர். எனவே சுகாதாரமான உணவுகளை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இதனை வழங்குவதாக கூறுகிறார்.

எக்ஸ்பைரி தேதி
இங்கு பிரசாதமாக வழங்கப்படும் உணவு பொருட்கள், FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முத்திரை பெற்றது. பிரசாதம் காலாவதியாகும் நாளும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கோயிலுக்கு தினசரி வரும் பக்தர்களின் பெயர், பிறந்தநாள் விபரம் குறித்து வைக்கப்பட்டும் அவர்கள் பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டு பக்தர்களுக்கு அவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தூய்மையே முக்கியம்
இதுகுறித்து கோயில் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீதர் கூறுகையில், "கோயிலின் தூய்மையில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். கோயில்களில் தரமற்ற பிரசாதங்கள் விநியோகிக்கப்படுவதை நாம் பார்த்துள்ளோம். அது சாப்பிடுபவர்களின் உடல் நலனின் தீங்கை ஏற்படுத்துகிறது. பக்தி மிகுதியால் பக்தர்களும் யோசிக்காமல் அவற்றை சாப்பிடுகிறார்கள். அது துர்கா பீடம் கோயிலில் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்." என்றார்.












Click it and Unblock the Notifications