தலைநகர் சென்னையில் 8218 பேருக்கு கொரோனா.. 2ஆம் அலையை விட அதிகம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி!
சென்னை: தலைநகர் சென்னையில் 2ஆம் அலையில் ஏற்பட்ட தினசரி கொரோனா கேஸ்களைவிட இன்று அதிகப்படியான நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர் நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனையும் நடத்தினார்,
64% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது:பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
உயரும் கொரோனா
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கடந்த டிச. 3ஆவது வாரம் முதலே வைரஸ் பாதிப்பு மெல்ல உயரத் தொடங்கிவிட்டது. இன்றைய தினம் மட்டும் மாநிலத்தில் 20911 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், பாசிட்டிவ் விகதமும் 11.5%ஆக உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களில் கிட்டதட்ட 10இல் ஒருவருக்கு பாசிட்டிவ் என முடிவுகள் வருகிறது.
சென்னையில் நிலைமை மோசம்
தலைநகர் சென்னையில் தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் கிட்டதட்ட 40%க்கு மேல், அதாவது 8218 தலைநகர் சென்னையில் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை உறுதி செய்யப்பட்ட தினசரி கொரோனா பாதிப்புகளில் இதுதான் அதிகம். கடந்த மே மாதம் 2ஆம் அலை சமயத்தில் மே 12ஆம் தேதி ஒரே நாளில் 7564 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருந்தது. அது தான் சென்னையில் அதிகபட்ச தின:ரி கொரோனா பாதிப்பாக இருந்த நிலையில், இன்று அதைவிட அதிகமாக 8218 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
படுக்கைகள்
சென்னையில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவினாலும் கூட மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஏனென்றால் லேசான பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள ஆக்சிஜன் படுக்கைகளில் 16.4% மட்டுமே நிரம்பியுள்ளது. அதேபோல ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் 38.4% நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஐசியு படுக்கைகள்
லேசான கொரோனா பாதிப்பே பெரும்பாலும் ஏற்படுவதால் ஐசியு படுக்கைகளும் கூட குறைவாகவே நிரம்பியுள்ளன. மொத்தமுள்ள ஐசியு படுக்கைகளில் 13.2%, அதாவது 256 மட்டுமே நிரம்பியுள்ளன. இது நேற்றைவிடக் குறைவாகும். கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் கூட மோசமான பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Recommended Video
பொங்கல் பண்டிகை
அதேநேரம் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். பேருந்துகளில் 75% மட்டுமே இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், பெரும்பாலான பேருந்துகள் 100% இருக்கைகளுடனேயே இயக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் எங்கு வரும் காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.