கொளத்தூரில் ஸ்மார்ட் கிளாஸ்..மாணவியுடன் உற்சாகமாக இறகுப்பந்து விளையாடிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கொளத்தூர் தொகுதியில் தீட்டித் தோட்டம் பகுதியில் ஒரு கோடியே 27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின் மாணவி ஒருவருடன் இறகுப்பந்து விளையாடினார். மேலும், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
கொளத்தூர் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் பந்தத்தோட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 4.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணி மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி பொருட்களை வழங்கிய ஸ்டாலின், ஆசிரியர்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார்.
இதையடுத்து பெரம்பூர் தீட்டித் தோட்டத்தில் 1 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து மற்றும் பூப்பந்தாட்ட உள்விளையாட்டு அரங்கினையும் அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவரை கரவொலி எழுப்பி மாணவர்கள் வரவேற்றனர். இதையடுத்து வீரர்களுடன் சேர்ந்து முதல்வர் பூப்பந்து விளையாடினார். மாணவியுடன் முதல்வர் விளையாடியது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 8.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் 37 பணிகளுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 4.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை கட்டும் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.