இன்னைக்கு ஒரு புடி! சூப் -பிரியாணி- சாலட்! தூய்மை பணியாளருடன் மதிய உணவு சாப்பிட்ட முதலமைச்சர்!
தூய்மை பணியாளர்களை கவுரவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மழை வெள்ளக் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், இன்று மதிய உணவை அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விருந்தில் சூப், பிரியாணி, சாலட், ஐஸ்கிரீம், என வகை வகையான உணவு பொருட்கள் பரிமாறப்பட்டன.
முதலமைச்சருடன் உயர் அதிகாரிகள் அமர்ந்து மதிய உணவு சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், தனது பக்கத்தில் தூய்மை பணியாளர் ஒருவரை அழைத்து அமர வைத்து சாப்பிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அறுசுவை சோறு போடக்கூடியவர் அமைச்சர் நேரு! எப்போதும் நான்கு கால் பாய்ச்சல் தான்! ஸ்டாலின் புகழாரம்!
முதல்வர் பாராடு
மழை வெள்ளக் காலங்களில் தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு சென்னை மாநகராட்சி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கு எத்தனையோ பாராட்டு விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன என்றும் ஆனால் அந்த விழாக்களையெல்லாம்விட, தூய்மை பணியாளர்களை பாராட்டக்கூடிய இந்த விழாவைத் தான் பெருமையாகக் கருதுகிறேன் எனவும் கூறினார்.
நான் வந்த காரணம்
அதைத் தொடர்ந்து பேசிய அவர், ஐந்து விரலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் அது ஒரு கையின் பலத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும் என்ற முதல்வர், மழைக்காலத்தின் போது தண்ணீர் நின்றால் - ஒரு மணி நேரத்தில் மோட்டார் வைத்து அதை அகற்றியது மாநகராட்சி என பெருமிதம் தெரிவித்தார். மழைக்காலத்தில் சிறப்பாக செயலாற்றியதாக அரசு பாராட்டு மழையில் நனைவதற்குக் காரணம் யார் என்று கேட்டீர்களென்றால், நீங்கள் தான் எனக் கூறிய முதல்வர் அதனால் தான், உங்களைப் பாராட்ட நான் வந்திருக்கிறேன் என்றார்.
இன்ப அதிர்ச்சி
இவ்வாறு பாராட்டி பேசிய பிறகு நானும் உங்களுடன் அமர்ந்து ஒன்றாக இன்று மதிய உணவு சாப்பிட போகிறேன் என இன்ப அதிர்ச்சி கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதையடுத்து முதல்வருடன் உயர் அதிகாரிகள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தூய்மைப் பணியாளர் ஒருவரை அழைத்து தனது அருகில் அமர வைத்து அவருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். மெனுவை பொறுத்தவரை எக்கச்சக்க உணவுப் பண்டங்கள் இடம்பெற்றிருந்தது.
மதிய உணவு
சூப்பில் டொடங்கி பிரியாணி உட்பட ஐஸ்கிரீமில் முடியும் வரை வகை வகையாக உணவுகள் அந்த விருந்தில் இடம்பெற்றிருந்தன. அதேபோல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவுகள் பரிமாறப்பட்டன. இதனிடையே தன்னுடன் அமர்ந்த சாப்பிட்ட தூய்மைப் பணியாளரிடம் சகஜமாக பேசிக்கொண்டே முதல்வர் சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.