மெரீனா மாற்றுத்திறனாளிகளுக்கான தற்காலிக பாதை நிரந்தரமாக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் ட்விட்
சென்னை: கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம், அதனை விரைவில் நிரந்தரம் ஆக்குவோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பல்வேறு மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள், சாதாரண குழந்தைகள் மக்களைப்போல், மாற்றுத் திறனாளி குழந்தைகளும் மாற்றுத்திறனாளி வயதுவதோரும், கடல் மற்றும் கடல் அலைகளை ரசிக்கவும், ஆர்பரித்து வரும் அலைகளில் கால்களை நனைத்து மகிழவும் ஏற்பாடு செய்யுமாறு பல ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தன.

இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையின் மிக அருகே சென்று, அலைகளில் காலை நனைத்து மகிழும் வகையில் பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது மரப்பலகையால் ஆன பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மரப்பலகை பாதையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அந்த பாதையை திறந்து வைத்ததோடு, மாற்றுத்திறனாளிகளோடு கடல் அலைகளில் காலை நனைத்து மகிழ்வதை கண்டு ரசித்தார். அப்போது பேசிய சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை நிரந்தரமான முறையில் அமைப்பதற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது எனவும், இதற்கான அனுமதி கிடைத்தவுடன் கூடிய விரைவில் இதனை நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தற்காலிக பாதை விரைவில் நிரந்தரமாக்கபடும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள், அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம், விரைவில் நிரந்தரம் ஆக்குவோம், சிறிய பணிதான் இது, பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications