சந்திர கிரகண நேரத்தில் குழந்தை பிறந்தால் யோகமா? தோஷமா? ஜோதிடம் சொல்வதென்ன?
சென்னை: இன்றைய தினம் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நிகழ்கிறது. கிரகண நேரத்தில் குழந்தை பிறப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். அதையும் மீறி இன்று இயற்கையாக சுக பிரசவத்தில் குழந்தை பிறப்பதை யாராலும் தடுக்க முடியாது. பொதுவாக கிரகண நேரத்தில் பிறந்த குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
பொதுவாக நிழல் கிரகங்கள் எனப்படும் ராகு, கேதுவுடன் மற்ற கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால் அது கிரகண தோஷம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்றால் பொதுவாகவே எல்லோருக்கும் பயம்தான் இந்த நேரத்தில் தீயவைகளுக்கு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதே போல ராகு காலம் எம கண்ட நேரங்களும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. இந்த நேரங்களில் பிறக்கும் குழந்தைகள் எப்படி இருக்கும் என்று கேள்வி வரலாம். அந்த குழந்தைகள் அதிக வலிமையோடும் ஆற்றலோடும் இருப்பார்களாம்.
இன்று சந்திர கிரகணம்! தமிழகத்தில் எப்போது தொடங்குகிறது? எங்கெல்லாம் ’ரத்த நிலா’வை பார்க்கலாம்?
கிரகண தோஷ ஜாதகங்கள்
கிரகண நேரத்தில் பிறந்த ஒருவரது ஜாதகத்தில், சூரியன், சந்திரன், நிழல் கிரகங்கள் மிக நெருக்கமான பாதையில் அமைந்திருக்கும். சந்திர கிரகணத்தின் போது சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுடன் இணைந்து சமசப்தமமாக இருக்கும். இன்றைய தினம் மேஷ ராசியில் ராகுவும் சந்திரனும், துலாம் ராசியில் சூரியனும் கேதுவும் இணைந்திருக்கும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சூரியன் சந்திரன்
சூரியனும் சந்திரனும் நம் உடலில் வெப்ப சக்தியாக நீர் சக்தியாக இருக்கிறார்கள். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் உடலில் இருக்கின்ற நீரும் நெருப்பும் இயல்பாக இருக்கும் போது கிரகணங்களால் நமக்கு பெரும் பாதிப்பு நேராது. அதே சமயத்தில் உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களின் உடலில் வெப்ப சக்தியும் நீர் சக்தியும் இயல்புக்கு மாறாக இயங்கும். இவர்களுக்கு கிரகங்களினால் பாதிப்பு நேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. சந்திர கிரகணத்தின்போது சந்திரன் மீது விழுவது பூமியின் நிழல். சூரிய கிரகணத்தின் போது பூமியின் மீது விழுவது சந்திரனின் நிழல். இப்படிப்பட்ட நிழல்களால் பூமியில் இருக்கக்கூடிய ஜீவராசிகளுக்கு உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் உருவாகின்றன. இந்த மாற்றங்களால் பாதிப்பு ஏற்படுவதையே தோஷம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
கிரகணத்தில் குழந்தை பிறந்தால்
கிரகணங்கள் ஏற்படுவது வானியல் நிகழ்வுதான் என்றாலும் ஜோதிடத்திலும் புராண கதைகளிலும் ராகு கேது எனப்படும் பாம்பு கிரகங்கள் சூரியனையோ சந்திரனையோ விழுங்கும் நிகழ்வு என்று சொல்லப்படுகிறது. இது நல்ல காலம் இல்லை. இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தைக்கு கிரகண தோஷம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிரகண காலத்தில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஜாதகத்தில் ராகு, கேது, சனி போன்ற பாவ கிரகங்கள் வலிமை பெற்றிருக்கும். இது அந்த குழந்தையை தலைவனாகவும் மாற்றும் அதே நேரத்தில் தேவையற்ற சேர்க்கை ஏற்பட்டால் பயங்கர வில்லனாகவும் அந்த குழந்தை மாறும் என்கின்றனர்.
யாரை பாதிக்கும்
கிரகண தோஷம் என்பது பிறந்த குழந்தையை விட அந்த குழந்தையின் பெற்றோரைத்தான் அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணத்தில் குழந்தை பிறந்தால் எதிர்காலத்தில் தந்தையின் வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைகளை அது பாதிக்க இடம் உண்டு. தந்தைவழி பூர்வீக சொத்துக்களை பெறுவதில் கூட சிக்கல் வரலாம். அப்பாவிற்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சந்திரன் தாய் காரகன் என்பதால் சந்திர கிரகணத்தினால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறந்தது கூட சந்திர கிரகண நேரத்தில்தான்.1948 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி ஒரு முழு சந்திரகிரகண நாளில் அதாவது ப்ளட் மூன் என்று சொல்லக்கூடிய நாளில் பிறந்தவர். மிதுன ராசியில் சூரியன் இருக்க தனுசு ராசியில் சந்திரன் இருக்க பவுர்ணமி ராசியில் பிறந்தவர் ட்ரம்ப். சந்திர கிரகணத்தில் பிறந்த டொனால்ட் ட்ரம்ப் மிகப்பெரிய வர்த்தகராகவும் பணக்காரராகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சின்னச் சின்ன பிரச்சினைகளை சந்தித்தாலும் அதை எளிதில் சமாளிக்கும் திறமை கொண்டவராகவும் இருக்கிறார் ட்ரம்ப்.
பதற்றமான மனநிலை
கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக ஆற்றலை பெற்றிருக்கும், அந்த ஆற்றலை நல்ல வழியில் செலுத்துவது பெற்றோர்களின் கைகளில்தான் உள்ளது. கிரகண காலத்தில் பிறந்தவர்கள் சிலருக்கு எந்த காரியத்திலும் தடையும் தாமதங்களும் ஏற்படும். ஏதோ ஒரு பதற்றத்திலேயே இருப்பார்கள். சிலருக்கு நோய் பாதிப்புகளும் ஏற்படும். இதற்கு ராகு கேது பரிகார சாந்தி செய்வதன் மூலம் காரியத் தடை ஏற்படுவதை தடுக்கலாம் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.