ஒரு வருஷம் ஆச்சு.. சிந்தாதிரிப்பேட்டை - கடற்கரை ரயில் சேவை எப்போது? பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்
சென்னை: சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு இறுதியில் தொடங்கியது. இதனால் பணிகள் எப்போது நிறைவடைந்து சிந்தாதிரிப்பேட்டை வழியாக ரயில் இயக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில், எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டது எனவும் எப்போது முழு பணிகள் முடியும் என்பது குறித்தும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் புறநகர் ரயில் ரூட்களில் மிகவும் முக்கிய வழித்தடம் எதுவென்றால் சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் தான். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த மின்சார ரயில்களில் பயணம் செய்கிறார்கள். சராசரியாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இந்த ரூட்டில் இயக்கப்படுவது வழக்கம்.

ஒரு சில நிமிடங்களில் ரயில் தாமதம் ஆனால் கூட ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதிவிடும். சமீபத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட யார்டு பணிகளுக்காக ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் ரயில் பயணிகள் மிகவும் கஷ்டப்பட்டதை காண முடிந்தது. ரயில்கள் சில மணி நேரம் இயங்காவிட்டால் மொத்த சென்னையே ஸ்தம்பித்துவிடும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும்.
இப்படி சென்னையின் புறநகரில் இருந்து மத்திய பகுதிக்குள் வருவதற்கான மிக முக்கியமான வழித்தடமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரூட் உள்ளது. இந்த ரூட்டில் தற்போது கடற்கரையில் இருந்து எழும்பூர் வரை 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் கடற்கரை - எழும்பூர் இடையே செல்லும் போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக , சென்னை கடற்கரை - எழும்பூர் இடையில் 4-வது வழித்தடம் அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை இருந்தது. இதன்படி, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.50 கி.மீ தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பில் புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி கடந்த ஆண்டு ஆகஸ்டு இறுதியில் தொடங்கியது. முதலில் மார்ச் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. 4-வது வழித்தட பணிகளால் சென்னை கடற்கரை- வெளச்சேரி இடையேயான ரயில் சேவை சிந்தாரிப்பேட்டையில் இருந்தே இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
4-வது வழித்தட பணிகள் முடிந்து எப்போது வேளச்சேரி ரயில்கள் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், எழும்பூர்- கடற்கரை 4-வது வழித்தடம் அமைக்கும் வழித்தடத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 110 மீட்டர் நீளத்தை கையகப்படுத்தும் பணியால் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது. இதற்கான அனுமதி கோரப்பட்டது.
ஆனால் வேலை தொடங்குவதற்கான எழுத்துப்பூர்வ அனுமதி இதுவரையில் கிடைக்கவில்லை. இதனால் அந்த பணிகளை முடிப்பதில் தொடர்ச்சியாக சிக்கல் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும், கடற்படைக்கு சொந்தமான இடத்தில் ரயில்வே தண்டவாளம் வருவதால் கடற்படையினருக்கு பாதுகாப்பு இருக்காது என கடற்படை நிர்வாகம் சார்பில் கூறுவதாகவும், அதற்காக அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டன. கடற்படைக்கு சொந்தமான 110 மீட்டர் நீளத்தில் உள்ள பணிகளை தவிர எஞ்சிய பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
கடற்படை அனுமதி கடிதம் கொடுத்த ஒரு மாதத்தில் பணி முடிந்துவிடும். சிந்தாதிரிப்பேட்டை - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கப்படும். ரயில்வே அமைச்சகம் கடற்படை தலைமையகத்திடம் பேசி வருகிறது. பருவமழைக்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது" என்றனர். எனவே இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் முடிந்துவிடும் என எதிபார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications