2 விஷயங்கள்.. ஸ்டாலின் எடுத்த புது ரூட்.. சிக்கும் மெகா புள்ளிகள்.. அனலடிக்கும் அறிவாலயம்..!
அமைச்சர்களுக்கு செக் வைக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் புது நடவடிக்கை எடுத்துள்ளார்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் 2 வித விஷயங்களில் தீவிரத்தை காட்டி வருவதாக கூறப்படுகிறது.. இது அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுகவுக்குள்ளேயே ஒருசில சீனியர்களிடம் கலக்கத்தை தந்து வருகிறதாம்.
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, காழ்ப்புணர்ச்சியுடன் திமுக அரசு செயல்படுவதாக யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்து வருகிறார்.
தேர்தல் பிரச்சாரங்களின்போது, ஊழல் புரிந்தவர்களை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்று சொன்னாலும், சட்டத்தின்முன் நிறுத்தி தவறுகள் உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற சட்ட வரிகளையும் சேர்த்தேதான் சொன்னார்..
வங்கதேச விடுதலை போர் வெற்றியின் 50ம் ஆண்டு விழா-போர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
நடவடிக்கை
அதன்படியே, வலுவான ஆதாரங்கள் கிடைத்த பிறகே, அந்த ஆதாரங்கள் அதிகாரிகளால் உறுதியான பிறகே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். அப்படி சிக்கியவர்தான், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட வெங்கடாச்சலம்.. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமல்லாமல், அவரது வலது கரமாகவும் திகழ்ந்த இளங்கோவனின் நட்பால், வெங்கடாச்சலம் அளவுக்கு அதிகமான செல்வாக்கை பெற்றார்...
முறைகேடுகள்
பல முறைகேடுகளுக்கு இது வழிவகுத்ததுடன், பல அதிமுகவின் புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது... வெங்கடாசலத்துடன், இணைந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுக புள்ளிகளை வளைக்க அதிகாரிகள் பிளான் செய்திருந்த நேரத்தில்தான், திடீரென வெங்கடாச்சலம் தற்கொலை செய்து கொண்டார்.. இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றாலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையும் இதை பற்றி விசாரித்து வருகிறது...
ஆதாரங்கள்
இப்போது புது விஷயம் என்னவென்றால், வெங்கடாச்சலத்துடன் தொடர்பில் இருந்த புள்ளிகளில் சிலர் ஆதாரத்துடன் சிக்கி உள்ளார்களாம்.. வெங்கடாசலம் இறந்துவிட்டதால், ரகசியங்களும் அவருடன் சேர்ந்தே மறைந்துவிடும் என்று அதிமுக கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்போது மறுபடியும் அதிமுக வட்டாரத்தில் கிலி தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
6 மாத கால ஆட்சி
அதேசமயம், தன்னுடைய திமுக ஆட்சியில் எந்தவிதமான ஊழல் புகாரும், முறைகேடுகளும் நடந்துவிடக்கூடாது என்பதிலும் ஸ்டாலின் துவக்கத்தில் இருந்தே கவனமாக இருக்கிறார்.. எனினும், சில சீனியர் அமைச்சர்கள் மீது அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள்.. அதனால்தான் இந்த 6 மாதத்தில், எத்தனையோ முறை அமைச்சரவை மாற்றம் என்ற செய்திகள் புயல்போல வெளிவருவதும், பிறகு அது பற்றின எந்தவிதமான அறிவிப்பும் நிகழாமல் போய்விடுவதுமாக இருக்கிறது.
அமைச்சர்கள்
உண்மையை சொல்லபோனால், அமைச்சர்களை மாற்றுவதில் முதல்வருக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லையாம்.. வேண்டுமானால் அமைச்சர்களிடத்தில் இருக்கும் கூடுதல் பொறுப்பை பிரித்து, அதிகாரிகளிடம் பகிர்ந்தளிக்ககூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஒருபடி மேலேபோய், அத்தகைய "அதிருப்தி அமைச்சர்களுக்கு" வேறு விதமான செக் வைத்துள்ளார்.. அதாவது, அமைச்சர்கள் செயல்பாட்டில் திருப்தி இல்லாத நிலையில், அந்த துறையின் செயலாளராக முக்கிய அதிகாரியை நியமித்துவிடுகிறாராம் ஸ்டாலின்..
பெரிய கருப்பன்
இதன்மூலம் சில அமைச்சர்களின் செயல்பாடுகளை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்க முடியும் என்றும் நம்புகிறாராம்.. அமைச்சர் பெரிய கருப்பன் வகித்து வரும் துறையின், அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் அப்படித்தான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. வணிக வரித்துறைக்கு பணீந்தர ரெட்டியை நியமனம் செய்ததன் காரணமும் இதுதானாம்.. சுருக்கமாக சொல்லப்போனால், சம்பந்தப்பட்ட அதிருப்தி அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டுமானால், ஒரு நல்ல அதிகாரியை நியமித்துவிட்டால் போதும், அந்த துறையில் தவறுகள் நடக்க வாய்ப்பிருக்காது என்பதே முதல்வரின் ஆழமான நம்பிக்கை.
சீனியர்கள்
இதன் விளைவு இப்போது என்னவென்றால் பல முக்கிய துறைகளின் அதிகாரிகள், முதல்வருடன் நேரடியாகவே தொடர்பில் இருக்கிறார்கள்.. ஆனால், இந்த அதிகாரிகள் நியமனங்கள், சில சீனியர் அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், இந்த விஷயத்தில் முதல்வரின் பிடிவாதத்தை பார்த்து எதுவும் பேச வழியில்லாமல் உள்ளனராம். அதேபோல, அளவுக்கு அதிகமாக முதல்வர் தங்களை நம்புவதால், அதிகாரிகளும், அனைத்து அரசு நல திட்டங்களும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் முனைப்பு காட்டிவருகின்றனர்.
கலைஞர்
இது அப்படியே மறைந்த கருணாநிதியின் பாணி என்கிறார்கள்.. கலைஞர் முதல்வராக இருந்தபோது, அதிகார படிநிலையை உடைத்து எல்லோரிடமும் பேசுவார்.. அதிலும் விஷயம் தெரிந்தவர்கள் என்றால், உடனே அழைத்து பேசிவிடுவார்.. அதிகாரிகளின் கருத்தை கவனத்தில் கொண்டாலும், அதை அப்படியே செயல்படுத்தாமல் உள்ளூர் மக்களிடம் அதை பற்றி விசாரிக்க சொல்லி, அதன்பிறகுதான் முடிவெடுப்பார்... கருணாநிதியின் வேகத்துக்கு அதிகாரிகளால் ஈடுகொடுக்க முடியாது என்றுகூட சொல்வார்கள். இப்போது அதே ரூட்டில் முதல்வர் ஸ்டாலின் நடந்து வருகிறார்..!