சிறுபான்மையினருக்கு திமுக அரசு செய்த நல்ல காரியங்கள் என்னென்ன? பட்டியல் வாசித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சிறுபான்மையினர் சமுதாய மக்களுக்கு திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் என்னென்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னையில் நடைபெற்ற 'அன்பின் கிறிஸ்துமஸ்' விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இயேசுபிரானின் அறிவுரையைப் பின்பற்றினாலே உலகம் எங்கும் அமைதி தவழும் எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அந்த விழாவில் முதல்வர் பேசியதாவது;

இயேசுபிரான் அறிவுரை
"உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். மிக எளிமையான வாசகம்தான், ஆனால் அதே அளவு வலிமையான வாசகமாகவும் இது இருக்கிறது. இயேசு கிறிஸ்து பெருமானின் இந்த ஒரு அறிவுரையைப் பின்பற்றினாலே உலகம் எங்கும் அமைதி தவழும்.''

சிறுபான்மையினர் நலன்
''மக்களிடைய வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரு தாய் மக்களாகக் கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது. சிறுபான்மையின மக்களுடைய நலனில் எப்போதும் அக்கறை செலுத்தி வரும் அரசு நம்முடைய கழக அரசு என்பதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். 1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர்.''

திமுக ஆட்சியில்
''1990-ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவர் கலைஞர். 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவரும் கலைஞர். 2007-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவரும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர். 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டுவந்தவரும் முதலமைச்சராக இருந்த முதல்வர் கலைஞர். அந்த வரிசையில்தான் இப்போதும் நாம் செயல்பட்டு வருகிறோம்.''''

உபதேசியார் நல வாரியம்
உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்பட இருக்கிறது. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் அலுவலகம் அமைக்கப்பட இருக்கிறது. கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாக துவங்கிட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.''












Click it and Unblock the Notifications