கோவை மாணவி தற்கொலை: அறம் தவறிய ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிச்சாமி
பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற துயர செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: அறம் தவறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பது தெரியவந்தது.
Orange Alert: கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
மாணவிக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில் மாணவியின் கடிதம் சிக்கியது. அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். வருகின்ற 21ம் தேதி வரை ஆசிரியர் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் போராட்டம்
இந்த சூழலில் ஆசிரியரின் நடவடிக்கை குறித்து புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்சோ சட்டம் பாய்ந்தது
இதனையடுத்து சின்மயா பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
வலுக்கும் கண்டனம்
பெங்களூருவில் இருந்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பள்ளி முதல்வர் மீராஜக்சன் அழைத்து வரப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மன வேதனை
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கோவையில் தனியார் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்ற துயர செய்தி மிகுந்த மனவேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடும் நடவடிக்கை தேவை
மாணவ-மாணவிகளுக்கு இன்னொரு பெற்றோராக இருக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு,அறம் தவறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.