83 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு... காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் - கல்வி அமைச்சர்
தமிழ்நாட்டில் 14 நாட்களில் 83 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறந்து 14 நாட்களில் 83 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். பள்ளியில் நுழையும் பொழுதே மாணவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் 2019-2020 ஆம் கல்வியாண்டில் ஆல்பாஸ் செய்யப்பட்டன. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமே தேர்வுகள் எழுதினர்.
2020-2021ஆம் கல்வியாண்டில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்றன. கொரோனா முதல் அலை சற்றே குறைந்த உடன் கடந்த ஜனவரி மாதம் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை வீரியமடையவே அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டன. 1 முதல் 8 வரை படித்த மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகளுக்கு செல்லாமல் உள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்துவது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் இரண்டாவது மாத கூட்டம் நடைபெற்றது.
அதுமட்டும் இல்லாமல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,சிஇஓ இரண்டாவது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதிக அளவில் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். குறைந்த அளவு மாணவர்கள் வருகை தந்த மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் என்று கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 87 சதவிகித மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக புதன்கிழமை தமிழக முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். இந்த 14 நாட்களில் 83 மாணவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பள்ளியில் நுழையும் பொழுதே மாணவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்படுகிறது.
வெப்பம் அதிகமாக இருந்தால் உடனடியாக அவர்கள் வீட்டிற்கும், மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் படித்த அறையையும் சுத்தப்படுத்தி மூன்று நாட்களுக்கு மூடி வைக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
நீட் தேர்வு சம்பந்தமாக சட்ட போராட்டங்கள் செய்து வருகிறோம். தற்போது வரை அதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஏதும் நிறுத்தப்படவில்லை என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அன்று சொன்னார்... இன்று செய்தார்... ராஜேஷ்குமாரை ராஜ்யசபாவுக்கு ஸ்டாலின் தேர்வு செய்த பின்னணி..!