அலறும் ஐஸ் ஹவுஸ்.. ஒரே தெருவில் ஒரே நாளில் மேலும் 19 பேருக்கு கொரோனா.. தீயாய் பரவும் தொற்று.. !!
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரே நாளில் 19 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது
சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.. இதில், இந்த பகுதியில் உள்ள விவி கிரி தெருவில் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஐ தொட்டுவிட்டதால், ஒட்டுமொத்த ஐஸ் ஹவுஸ் பகுதியும் அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளது!
தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.. பல மாவட்டங்கள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு பச்சை கலருக்கு மாறி கொண்டுள்ளன... மேலும் பலர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி வருகின்றனர்.
அதே சமயம் ஒருசில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது.. இதில் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள சென்னையில் மட்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் சென்னை மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.
கிரீன் சோன்களில் மதுக்கடைகளுக்கு அனுமதி.. தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் மட்டும் திறக்கப்படும் டாஸ்மாக்
டாக்டர்கள்
சென்னையில் டாக்டர்கள், போலீஸ்காரர்கள், தீயணைப்பு வீரர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களையும் வைரஸ் பாதித்துள்ளது.. இதனால் சென்னையில் வைரஸை கட்டுப்படுத்த முழு வீச்சில் மாநகராட்சி இறங்கி உள்ளது. எப்படி கோயம்பேடு பகுதி கலக்கத்தை தருகிறதோ அதேபோல மிரட்டி வரும் பகுதி ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் பகுதியாகும்.
நெருக்கடி
மிக நெருக்கடியான தெருக்கள் உள்ள பகுதி.. இங்குள்ள வி.ஆர்.பிள்ளை தெருவில் ஏற்கனவே 16 பேருக்கு கொரோனா வைரஸ் இருந்தது.. இந்நிலையில் இன்று மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியிருக்கிறது.. அதனால் ஒரே தெருவில் 35 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது மக்களின் அடிவயிற்றில் கிலியை ஏற்படுத்தி வருகிறது.
ஒரே குடும்பம்
இதில் கொரோனா தொற்று பாதித்த நபரின் வீட்டில் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் 11 பேர் குடியிருந்துள்ளனர்.. இவர்கள் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.. அதிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி அவர்களது 2 பிள்ளைகளுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது... இதனால் ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள எல்லா தெருக்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கட்டுப்பாடு
வி.ஆர்.பிள்ளை தெரு போலவே முனுசாமி தெரு, கஜபதி தெரு தெருக்களிலும் கூடுதல் கண்காணிப்பு நடந்து வருகிறது.. எல்லா வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.. தன்னார்வலர் ஒருவருக்கும் தொற்று பரவி உள்ளது. ஏற்கனவே அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று பரவி வருவதால், ஒட்டுமொத்த ஐஸ் ஹவுஸ் பகுதி மக்களும் தங்களை தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் நிலையில் உள்ளனர்.. இதனால் ஐஸ் ஹவுஸ் பகுதி மொத்தமாக மூடப்பட்டு, அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளது.