"டிசாஸ்டர் ஸ்பெஷலிஸ்ட்" வந்துவிட்டார்.. புது ஆக்சன் பிளான்.. தயார் ஆகிறது சென்னை.. கொரோனா ஆட்டம்!
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு முதன்மை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ஜே. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரின் இந்த நியமனம் மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் நாளுக்குள் நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்தபடியே இருக்கிறது. இப்போதைக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். சரியாக சொல்ல வேண்டும் என்றால் சென்னையில் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்துவது என்றே தற்போது தெரியாத அளவிற்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 176 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது.
நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு முதன்மை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ஜே. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று தலைமை செயலாளர் சண்முகம் திடீர் என்று இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார். இவரின் இந்த நியமனம் மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கொரோனா தடுப்பிற்காக சென்னை தயாராகிறது, எதுவும் நடக்கலாம் என்பதால் சென்னை இப்படி தயார் ஆகிறது என்று கூறுகிறார்கள்.
தயார் நிலை
ஆம், சென்னையில் சமீப நாட்களாக ஏற்படும் கொரோனா கேஸ்கள் எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. பலருக்கு கொரோனா கேஸ்களுக்கான ஹிஸ்டரி கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று வந்த 176 கேஸ்களில் 88 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. கடந்த 5 நாட்களில் 212 பேருக்கு சென்னையில் எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இதனால் சென்னையில் கண்டிப்பாக ஸ்டேஜ் 3 வந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.
ஸ்டேஜ் 3 கொரோனா
இதனால் சென்னை மிக மோசமான பாதிப்பிற்கு தன்னை தயார்படுத்திக் கொள்கிறது என்று கூறுகிறார்கள். ஸ்டேஜ் 3 பரவலுக்காக நாம் தயார் ஆகி வருகிறோம். ஏற்கனவே அனைத்து அரசு, தனியார் மருத்துவமனையிலும் கூடுதல் பெட்களை தயார் செய்து வைத்து இருக்க வேண்டும் என்று அறிவிப்பு சென்றுவிட்டது. தனியார் நிறுவனங்கள் தங்கள் பகுதிகளை கொரோனா சிகிச்சைக்காக அளித்து இருக்கிறது. இது இல்லாமல் மாநகராட்சி சில இடங்களை தற்போது தேர்வு செய்துள்ளது.
பள்ளிகள் தயார் நிலை
இதற்கு முன்பே சென்னை மாநகராட்சி பள்ளிகளை தயார் நிலையில் வைத்துள்ளது. சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரிடர் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த அவசர அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இது மாநகராட்சிக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் சட்டமாகும். இந்த சட்டத்தை மாநகராட்சி கையில் எடுத்தது, எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது, அதற்கு மாநகராட்சி தன்னை தயார் படுத்திக்கொள்கிறது என்பதை இது உணர்த்தியது.
வந்துவிட்டார்
இந்த நிலையில்தான் தற்போது சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு முதன்மை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ஜே. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்தான் இனிமேல் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு திட்ட பணிகளை வகுத்து கொடுப்பார். இவருக்கு சென்னை தலைமை செயலகத்தில் டிசாஸ்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் இருக்கிறது. இவரின் முன் அனுபவமும், இவர் எடுத்த சில பயிற்சிகளும்தான் இதற்கு காரணம்.
என்ன அனுபவம்
தமிழகத்தில் பெரிய பெரிய பேரிடர் வந்த சமயங்களில் எல்லாம் இவர்தான் அந்த பகுதிகளில் பணியாற்றி மீட்பு பணிகளை செய்துள்ளார்.
2004ல் சுனாமி தாக்கிய போது இவர் செய்த பணி பாராட்டப்பட்டது .
சுனாமியின் பொத்து நாகப்பட்டினம் மற்றும் கடலூரில் மக்கள் பலரை மிக வேகமாக செயல்பட்டு காப்பாற்றி இவர் பாராட்டுகளை பெற்றவர்.
2004 கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் பலியான போதும் அங்கு மீட்பு பணிகளை இவர்தான் கவனித்துக் கொண்டார்.
தமிழகத்தில் நிஷா, வர்தா புயல் உட்பட பல்வேறு புயல்களில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
6 வருடம் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தார். இவர் இருந்த போதுதான் நிப்பா, மலேரியா உள்ளிட்ட நோய்கள் தமிழகத்திற்கு வராமல் தடுத்தார்.
பயிற்சி எடுத்தார்
அதேபோல் மிக முக்கியமாக தமிழக அரசின் கீழ் இவர் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தடுப்பு முதன்மை செயலாளர் என்ற பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இதற்காக கடந்த 3 வருடமாக பேரிடர் மேலாண்மை குறித்த சிறப்பு பயிற்சிகளை எடுத்து வருகிறார். பேரிடர் மேலாண்மையில் இவர் தமிழகத்தின் முகம் மட்டுமில்லை, இந்தியாவின் முகம் என்று கூறுகிறீர்கள். ஏனென்றால் ஐக்கிய நாடுகளின் பேரிடர் மேலாண்மை மேம்பாட்டு திட்டத்திற்கான (யுஎன்டிபி) இந்தியாவின் உதவி இயக்குனரே இவர்தான். அந்த அளவிற்கு இவரின் பெயர் உலக அளவில் பிரபலம்.
ஆக்சன் பிளான் எப்படி
இவருக்கு கீழ் மொத்தமாக புதிய ஆக்சன் பிளான்களை வகுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மீண்டும் முதலில் இருந்து பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக இவருக்கு கீழ் பெரிய ஐபிஎஸ் அதிகாரிகள் டீம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . ஐபிஎஸ் அதிகாரிகள் மகேஷ் குமார் அகர்வால் (சென்னை வடக்கு ), ஆபாஷ் குமார்Kumar (சென்னை கிழக்கு), அம்ரேஷ் பூஜாரி (தெற்கு சென்னை), அபய் குமார் சிங் (மேற்கு சென்னை) மேலும் கே புவனேஷ்வரி (சென்னை மாநகரம்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பானவர்
எந்த நேரத்தில் போன் செய்தாலும் எடுக்க கூடியவர், மக்களுக்கு நெருக்கமான நபர் என்று ராதகிருஷ்ணனுக்கு
நற்பெயர் இருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரின் குட் புக்கில் இருந்த ஒரு சில அதிகாரிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் தமிழக அரசு சுகாதார பணி தொடர்பாக இவரை அழைத்துள்ளது. இனியாவது சென்னை கொரோனாவில் இருந்து மீளும் என்று நம்புவோம்.