சிதம்பரம் கோவிலுக்குள் அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த தீட்சிதர்கள்... நானே வரேன்...கிளம்பிய சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் விசாரணை மேற்கொள்ள சென்ற துணை ஆணையர் தலைமையிலான குழுவை கோவிலுக்குள் அனுமதிக்க தீட்சிதர்கள் மறுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டபூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகள் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த விசாரணைக்கு அங்கு உள்ள தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டை உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு கோவில்களை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு மானிய கோரிக்கையில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கோவில்களை சீரமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடராஜர் கோவில் விவகாரம்
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய மறுக்கப்பட்டு உள்ளதை பதிவு செய்துள்ளோம்.

நேரடி கள ஆய்வு
சட்டபூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆணையருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். அமைச்சர் சேகர்பாபுவே நேரடியாக செல்ல உள்ளதால் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பிரச்சினை பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பட்டினப்பிரவேசம்
ஆதீன பட்டினப்பிரவேச விவகாரத்தை பொறுத்தவரை, பயத்தின் அடிப்படையில் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது. எதிர்காலங்களில் பட்டினப்பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

அனைவருக்குமான அரசு
மனித உரிமை மீறல்கள் இல்லாமல் வரும் காலங்களில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விஷயத்தில் மேலும் கீ.வீரமணி அவரது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். மற்றபடி உண்மையில் இந்த அரசு ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்குமான அரசாக உள்ளது. அவ்வளவுதான் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications