"கிறிஸ்டியன்" ஜி.யு போப் மதபோதகர்.. வந்ததும் அதுக்குதான்.. ஆளுநர் பேச்சால், குறளுடன் ஓடிவந்த ஜோதிமணி
ஆளுநர் ரவியின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழக ஆளுநர் திருக்குறளை வைத்து மதவெறியை தூண்டலாம் என்று நினைக்கிறார்.. இது அன்பின் நிலம், பகுத்தறிவின் நிலம். ஒற்றுமையின் நிலம். பிரிவினைக்கு இங்கே வேலையில்லை என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வரும்நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து அவரை விமர்சித்து வருகின்றன...
அதாவது, ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாகவே மாறி வருகிறது என்று கூட்டணி கட்சிகள் வெளிப்படையாகவே சொல்லி வருகின்றன..
எடப்பாடி வீசிய 6 சரவெடிகள்.. ஒரே பாயிண்டில் பதிலடி தந்த ஓபிஎஸ்.. கோர்டில் நடந்தது என்ன? பின்னணி!
புறக்கணிப்பு
அதனால்தான், தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விசிக குரல் அன்றே எழுப்பியது.. ஒரு மாநில ஆளுநரின் தேநீர் விருந்தையே புறக்கணிக்கும் அளவுக்கு, ஆளுநர் மீது அதிருப்திகள், தமிழக கட்சிகளுக்கு பெருகி விட்டன.. அரசியல் நடவடிக்கைகளில் இப்படி என்றால், ஆளுநர் ரவியின் பேச்சுக்கள் பெரும்பாலும் சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றன.. சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியது என்பன உட்பட பல்வேறு இந்துத்துவா சார்ந்த கருத்துக்களை ஆளுநர் பதிவு செய்து கொண்டே இருப்பதால், எதிர்க்கட்சிகள் அந்த கருத்துக்களையும் விமர்சித்து கொண்டே வருகின்றன..
ஆர்எஸ்எஸ் ரவி
"ஆளுநர் ஆர்என்ரவி, ஆர்எஸ்எஸ்ரவியாக செயல்படுகிறார், சனாதனம் பற்றி பேசிய அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொண்டாற்ற போக வேண்டும்" என்று திருமாவளவன் ஒருமுறை காட்டமாக கூறியிருந்தபோதும்கூட, இந்த சர்ச்சை பேச்சு இன்றும் தொடர்ந்துள்ளது.. இப்போது 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் பற்றி பேசியிருக்கிறார் ஆளுநர்.. முழு திருக்குறள் பற்றியெல்லாம் அவர் பேசவில்லை.. திருக்குறளில் பக்தி ஆன்மாவை வேண்டுமென்றே சிதைத்துவிட்டார்கள்.. அப்படி சிதைத்தது, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஜி.யு. போப் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஆளுநர்.
சுவிசேஷம்
டெல்லியில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து பேசும்போது, "ஜியு போப் தன்னுடைய மொழிபெயர்ப்பில் ஒரு அவமதிப்பை செய்திருக்கிறார். ஒட்டுமொத்த திருக்குறளையும் அவர் ஆன்மீகமற்றதாக ஆக்கியிருக்கிறார்.. திருக்குறளில் இருந்த ஆன்மிக தாக்கத்தை அவர் தவிர்த்திருக்கிறார். ஜியு போப் ஒரு மதபோதகர்... அவர் சுவிஷேசத்தை பரப்பும் சொசைட்டியின் உறுப்பினர்.. 1813-ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம், ஒரு சட்டத்தை இந்திய சாசனம் என்ற பெயரில் நிறைவேற்றியது. அதில், இந்தியாவில் கிறிஸ்துவ இறை நம்பிக்கையை பரப்பும் நோக்கம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆதி பகவன்
அதன்படியே ஜி.யு.போப் இந்தியாவுக்கு ஊழியம் செய்வதற்காக வந்தார், தமிழை பயின்றார், திருக்குறளை தேர்ந்தெடுத்து அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதில் இருந்த ஆன்மாவையை பிரித்தெடுத்தார்... மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யு.போப் தந்திருக்கும் திருக்குறளின் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது. திருக்குறளில் உள்ள பக்தி ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது... மொழி பெயர்ப்பில் ஆதி பகவன் என்பதை தவிர்த்துள்ளார் என்று பேசியுள்ளார்.
பகுத்தறிவின் நிலம்
ஆளுநரின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.. அதில், தமிழக ஆளுநர் திருக்குறளை வைத்து மதவெறியை தூண்டலாம் என்று நினைப்பது தமிழகத்தைப் பற்றியும், உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றியும் அவருக்கு எந்தப் புரிதலும் இல்லை என்பதையே காட்டுகிறது. இது அன்பின் நிலம், பகுத்தறிவின் நிலம். ஒற்றுமையின் நிலம். பிரிவினைக்கு இங்கே வேலையில்லை.
விசாலமாகும்
மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு கீழ்க்கண்ட குறளைப் பரிந்துரை செய்கிறேன். "புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற" ஒற்றுமையைப் போல் வேறொன்றை கடவுளர் உலகம் சென்றாலும் பெற இயலாது என்பது அதற்கு பொருள். திருக்குறளை முழுக்க படியுங்கள். அறிவும், மனதும் விசாலமாகும்" என்று ஜோதிமணி தெரிவித்திருக்கிறார்... இத்தனை நாட்களும், தமிழகத்தில் மட்டுமே சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழகம் தாண்டியும் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைக்கு பாதையை வகுத்துள்ளது ஆளுநரின் இந்த பேச்சு..