தலித் வாக்குகளுக்கு குறி.. சீமான் எடுத்த புது அரசியல்.. செக் யாருக்கு திமுகவுக்கா? விசிகவுக்கா?
சென்னை: சென்னை மாகாணத்தில் தலித்துகளுக்கு ஆங்கிலேயர் ஆட்சியில் தரப்பட்ட 12 லட்சம் பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதித்தமிழ்க்குடி மக்களிடம் அளிக்கும் போராட்டத்தை விரைவில் தொடங்கப் போவதாக சீமான் அறிவித்துள்ளதை பார்க்கும் தலித் மக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து அவர் சில முன்னெடுப்புகளை எடுக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலில் பஞ்சமி நிலம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பஞ்சமி நிலம் அல்லது Depressed Class Land என்பது நிலமற்ற ஏழை தலித்துகளுக்காக 1892ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள். தலித்துகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக ஆராய்ந்து ஆங்கிலேயர் அரசாங்க மேற்கொண்ட மிக முக்கியமான நடவடிக்கை இது.
ஆங்கிலேயர் ஆட்சியில் வருவாய்த்துறை பதிவு ஏடுகளில் பஞ்சமி நிலம் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய பஞ்சமி நிலங்களை தலித்துகளைத் தவிர இதர சமூகத்தினர் வாங்க முடியாது.
தலித்துகளின் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? இனி போராட்டம்- சீமான் திடீர் அறிவிப்பு
செல்லாது
அப்படியே வாங்கி இருந்தாலும் அது செல்லாது என்கிறது சட்டம். சென்னை மாகாணம் முழுவதும் அதாவது இன்றைய தமிழகம் முழுவதும் இப்படி பஞ்சமி நிலங்கள், பல லட்சம் ஏக்கர் தலித்துகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு பஞ்சமி நிலம் என்பதே இல்லை என்கிற நிலைமைதான் உள்ளது. பெரும்பான்மை பஞ்சமி நிலங்கள் கைமாறப்பட்டுள்ளன.
பஞ்சமி நில மீட்பு
இந்த நிலையில்தான் பஞ்சமி நில மீட்பு இயக்கத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை 55 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் சமூகநீதி ஆட்சிக் காலத்தில்தான் ஏமாற்றி முறைகேடாக அபகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள சீமான் விரைவில் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் அறிவிப்பு
இதன் மூலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலித்துகளின் வாக்கு வங்கியை பக்காவாக குறி வைத்து பஞ்சமி போராட்டத்தை அறிவித்துள்ளதாகவே சொல்லப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே திமுகவையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் விமர்சித்து வந்தவர் சீமான்.
ஆ ராசாவுக்கு ஆதரவு
ஆனால் அண்மையில் திடீரென திமுக எம்பி ஆ ராசாவுக்கும் திருமாவளவனுக்கும் ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்திருந்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக எம்பி ஆ ராசா பேசுகையில் இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன் , இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாகவும் தீண்டத்தகாதவனாகவும் இருக்க விரும்புகிறீர்கள் என கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இந்து தர்மம்
என்னதான் இந்த கருத்துகள் இந்து தர்மத்தில் இருப்பதாக சொல்லப்பட்டதாலும் பாஜகவினரும் இந்து அமைப்பினரும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். ஆ ராசாவுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்தனர். ஆ ராசாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் திமுக தலைமைகூட எந்த கருத்தையும் சொல்லாமல் இருந்த நிலையில்தான் சீமான் , ராசாவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
மதவாதிகள்
அதாவது மதவாதிகள் ஆ ராசாவை குறி வைத்து தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றார். சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் சீமான் திமுகவை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? அதிமுக, திமுக உள்ளிட்டவற்றை பரம எதிரியாக பார்க்கும் சீமான் ஆ ராசாவுக்கு ஆதரவாக கருத்து கூறியிருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
திருமாவுக்கும் ஆதரவு
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் அக்டோபர் 2ஆம்தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஊர்வலத்திற்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சமூக நல்லிணக்க பேரணியை நடத்துவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். இவர் அறிவித்ததும் முதல் ஆதரவை சீமான் கொடுத்தார். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான பேரணியில் நாம் தமிழரும் கலந்து கொள்ளும் என்றார். நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி அல்ல என சொல்லிய போது தனியாக நின்று என்ன செய்ய போகிறார்கள் என திருமாவளவன் சீமானை கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் திருமாவுக்கு ஆதரவாக சீமான் கை கொடுத்திருப்பது அவருடைய "தம்பிகளுக்கே" சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
தலித் வாக்கு வங்கிக்கு குறி
தலித் சமூகத்தை சேர்ந்த ஆ ராசாவுக்கும் திருமாவளவனுக்கும் ஆதரவாக சீமான் பேசியிருந்தது வட தமிழகத்தில் உள்ள தலித்துகளின் வாக்கு வங்கியை குறி வைத்து என சொல்லப்பட்டது. அதற்குத்தான் சீமான் காய் நகர்த்துவதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதை உண்மை என நிரூபிப்பது போல் பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம் என சீமான் கூறியிருப்பது தலித்துகளின் வாக்கு வங்கியை குறி வைத்தே சீமான் தற்போது களத்தில் இறங்கியுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.