சுபஸ்ரீ மரணம்.. டிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி வழக்கு
Recommended Video
சென்னை: சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்களை விட்டுவிட்டு டிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது.
டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான எஸ்.பஷீர் அகமது தாக்கல் செய்துள்ள மனுவில், தனிநபர்கள், நிறுவனங்கள் அரசு துறைகளுக்கு டிஜிட்டல் பேனர்கள் அடித்து தருவதாகவும், பிரிண்டிங் தொழிலில் பல லட்சம் முதலீடு செய்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகராட்சி சட்டத் திருத்தத்தின் கீழ் முறையான உரிமம் பெற்று தொழில் செய்து வருவதாகவும் சுபஸ்ரீ மரணத்தை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீஸில் தங்கள் அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றம் டிஜிட்டல் பேனர்களை தடை செய்யவில்லை என்றும், பிரிண்டிங் பிரஸ் மற்றும் டிஜிட்டல் பேனர் நிறுவனங்களுக்கு சீல் வைக்க எந்த உத்தரவும் பிறபிக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் பேனர் எங்கு வைக்க வேண்டும் என்று நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்றும், சுபஸ்ரீ மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். யார் விதிகள் மீறி பேனர் வைத்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தயாரிப்பு நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் கோபத்தை காட்டக்கூடாது என்று மனுவில் கூறியுள்ளார்.
எனவே எங்கள் தொழில் பாதிக்கப்படுவதாகவும், எங்கள் தொழிலில் மாநகராட்சி அதிகாரிகள் தலையிடுவதை தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷ்சாய் முன் முறையிட்டனர். மனுவை தாக்கல் செய்யுங்கள் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications