எப்படி இருந்த தேமுதிக... தப்புத் தப்பா கணக்குப் போட்டு. .. இப்படி திக்கு திசை தெரியாம போயிருச்சே!
சென்னை: தனித்து போட்டியிட்டு தங்களை நிரூபித்த தேமுதிக இன்று தானாக போய் போய் ஒரு கட்சியுடன் ஒட்டிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனை அளித்தாலும் இதற்கு விஜயகாந்தின் பொறுமையின்மையும் சுற்றத்தாரின் தலையீடே காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
கேப்டன் விஜயகாந்த் என்றால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பறந்து பறந்து பந்தாடுபவர். அரசியல்வாதிகளை தட்டி கேட்கும் நல்ல காவல் துறை அதிகாரி, எந்த சூழலிலும் தவறுக்கு துணை போகாதவர், அனைவருக்கும் உதவுபவர் என திரைப்படங்களில் பார்த்து பார்த்து நம் மக்கள் பழகிவிட்டார்கள்.
திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் கேப்டன் எல்லாருக்கும் உதவி செய்பவர்தான். இது போன்ற கேப்டனின் உண்மையான முகத்திற்குதான் அவர் கட்சி தொடங்கியதுமே மக்கள் ஆதரவு அளிக்க தொடங்கினார்கள்.

ஜெயலலிதா, கருணாநிதி
போட்டியிட்டவுடன் இரண்டு இலக்க சதவீதத்தில் ஓட்டு வாங்கியவுடன் பல ஆண்டுகளாக அரசியல் செய்து வந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஆடி போய்விட்டார்கள். இதனால் 2011ஆம் ஆண்டு அவருடன் கூட்டணி வைக்க இந்த தலைவர்கள் இருவரும் போட்டி போட்டார்களாம். பின்னர் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து 2011 ஆம் ஆண்டு திமுகவையே பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பிடித்தார் விஜயகாந்த்.

அரசியல்
இதையடுத்து விஜயகாந்தின் அரசியலையும் அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கையும் நாடே திரும்பி பார்த்தது. கூட்டணி அமைத்து எதிர்க்கட்சித் தலைவரானவுடன் ஜெயலலிதாவின் மக்கள் விரோத செயல்பாடுகளை விஜயகாந்த் விமர்சிக்கத் தொடங்கினார். அவையில் ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் மோதியனார் விஜயகாந்த்.

கையெழுத்து
இதனால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி உடைந்தது. இந்த அரிய வாய்ப்பை அவரது ஆத்திரம் மற்றும் முன்புத்தியால் தவறவிட்டார் என்றே சொல்லலாம். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால் அடிமட்ட அளவில் வளர வேண்டும். என்னதான் எம்எல்ஏக்கள் ஒரு திட்டத்திற்கு கையெழுத்திட்டாலும் அதை செயல்படுத்துபவர்கள் உள்ளாட்சி அமைப்பினர்தான்.

நன்மைகள்
எனவே ஜெயலலிதாவை முறைத்துக் கொள்ளாமல் விஜயகாந்த் பொறுமையாக இருந்திருந்தால் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை பெற்றிருக்க முடியும். அதன் மூலம் மக்களுக்கு நன்மைகளை செய்திருக்க முடியும். அதை அவர் கோட்டை விட்டார். வாழ்க்கையில் மட்டுமல்ல அரசியலிலும் நிதானமும் பொறுமையும் வேண்டும். ஆனால் அது விஜயகாந்திடம் இல்லாமல் போய்விட்டது.

3ஆவது அணி
சரி அப்போதுதான் விட்டுவிட்டார் என்றால் மீண்டும் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைப்பார் என கருணாநிதி எண்ணிய போது பாஜக தலைமையில் 3ஆவது அணியை உருவாக்கினார். அப்போதைய தேர்தலில் கடுமையாக தோல்வி அடைந்தார். இந்த தோல்வியிலிருந்து விஜயகாந்த் நிச்சயம் பாடம் கற்றுக் கொண்டிருப்பார் என கருணாநிதி எண்ணினார்.

வைகோவுடன் மக்கள் நலக் கூட்டணி
எனவே 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயகாந்தோ வைகோ தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கினார். அதாவது மக்கள் நல கூட்டணி, இதிலும் விஜயகாந்திற்கு சறுக்கல்தான். இதையடுத்து அதிமுக கூட்டணியில் இணைந்து 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக போட்டியிட்டது.

வாக்கு வங்கி சரிவு
இதிலும் விஜயகாந்திற்கு பெருத்த அடிதான். வாக்கு வங்கியும் கடுமையாக சரிந்து விட்டது. வரும் தேர்தலில் தேமுதிக நிச்சயம் ஜெயித்தே ஆக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம், கடந்த தேர்தலை போல் டக் அவுட் ஆனாலும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். எனவே கழுதை தேய்ந்து கட்டெறும்பான தேமுதிகவை அதிமுகவும் சரி திமுகவும் சரி சீண்டவில்லை.

இல்லாட்டி போகட்டும்
வந்தால் வரட்டும், இல்லாட்டி போகட்டும் என்ற அளவில்தான் இருக்கிறது. இத்தனை இருந்தும் பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் என இவர்கள் 3 பேரும் தேமுதிக தலையே நிமிராத அளவுக்கு வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். விஜயகாந்த் சேர்த்து வைத்த கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் சுற்றியிருப்போர் கெடுத்து விட்டு தற்போது 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு கேப்டனை முதல்வர் ஆக்குவோம் என கனவு கண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications