மோடி.. இங்கேயா? வரட்டும்.. தோற்கடிப்போம்.. சவால் விட்ட திமுக! ஆஹா.. பெரிய சம்பவம் நடந்துடும் போலயே!
சென்னை : வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பிரதமர் வேட்பாளர் மோடி தமிழ்நாட்டில் உள்ள எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை திமுக தோற்கடிக்கும் என தருமபுரி திமுக எம்.பி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவை வலுவாக காலூன்ற வைக்கும் திட்டத்தில் இருக்கும் தேசிய தலைமை, பிரதமர் மோடியை தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க வியூகம் அமைப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, ராமநாதபுரத்திற்கு பிரதமர் மோடி குறிவைத்துள்ளதாக தகவல்கள் பரபரத்து வருகின்றன. இந்நிலையில், பாஜகவிற்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார் திமுக எம்.பி செந்தில் குமார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ்.. அமைச்சர் ரகுபதி சொன்ன தகவல்!
ராம்நாட்டில் மோடி
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருடமே இருப்பதால் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. மேலும், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் எங்கெங்கு போட்டியிடலாம், கூட்டணி எந்தெந்தக் கட்சியுடன் என்பது குறித்தெல்லாம் பாஜக மேலிடம் ஆலோசித்து வருகிறதாம். இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2 தொகுதிகள்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு தொகுதி உத்தர பிரதேசத்தின் வாரணாசி என்றும், மற்றொரு தொகுதி தமிழ்நாட்டின் ராமநாதபுரமாக இருக்கக்கூடும் என்றும் பாஜக வட்டாரத்தில் பேசப்படுவதாக தகவல் வெளியானது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரு இடங்களில் போட்டியிட்டு வென்றார். பின்னர் வதோதரா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
காசி + ராமேஸ்வரம்
அதேபோல, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மிகத் தலங்களான காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைத்து வளர்ச்சி அடையச் செய்யும் பாஜகவின் நோக்கத்துக்கு ஏற்பவே, உத்தர பிரதேசத்தின் வாரணாசியிலும், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியிலும் பிரதமர் மோடி போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜக டார்கெட்
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் 25 தொகுதிகளைக் கைப்பற்றும் என அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் பாஜகவை வலுவாகக் காலூன்ற வைக்க தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், பாஜகவின் தேசிய முகமாக உள்ள பிரதமர் மோடியை தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வைத்தால், கூடுதல் கவனம் பெறுவதோடு, பாஜக காலூன்ற ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
திரும்பி பார்க்கும் கட்சிகள்
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட இருப்பதாக வெளியான தகவல், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் இந்தத் திட்டம் உண்மையானால், பாஜகவை வீழ்த்த கடுமையான சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், திமுக உள்ளிட்ட கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என்றும், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் எங்கு நின்றாலும் திமுக தோற்கடிக்கும், இது சவால் என்றும் தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக வளர்ச்சி?
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்கள், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக தருமபுரியில் 14 வார்டுகளில் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளது. ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அந்த கட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து தான் நிர்ணயிக்கும். அண்ணாமலை தலைமையேற்ற பிறகு பாஜக தருமபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்து, டெபாசிட் இழந்துள்ளது எனத் தெரிவித்தார்.
மோடிக்கு சேலஞ்ச்
மேலும், 2024 தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடப்போவதாக வரும் தகவல் குறித்துப் பேசிய எம்.பி செந்தில் குமார், பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக செய்திகள் வாயிலாக தெரிந்துகொண்டேன் இதை வரவேற்கிறேன். பாஜகவிற்கு நான் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன். பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, தருமபுரி தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, அவரை திமுக தோற்கடிக்கும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தருமபுரியில் வந்து போட்டியிடட்டும். திமுக வேட்பாளராக யாரை நிறுத்தினாலும், பாஜகவை எளிதாகத் தோற்கடிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.