Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேக் டு பேக் சம்பவங்கள்.. முட்டிக்கொள்ளும் திமுக கூட்டணி.. கொச்சைப் படுத்துறீங்களா? கொதிக்கும் காங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அடுத்தடுத்து 2 விஷயங்களால் திமுக - காங்கிரஸ் இடையே முரண்பாடுகள் எழுந்திருப்பதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாம். ஒருபக்கம் பாஜக கூட்டணி கட்சிகள் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருவது உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார அடிப்படையிலான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வெளிப்படையாக ஆதரித்து வருகிறது.

இது ஒரு பக்கம் என்றால், நேற்று உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேரையும் விடுதலை செய்துள்ளதற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சி இந்தத் தீர்ப்பை கடுமையாக கண்டித்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் கொந்தளிப்புகள் ஏற்பட்டுள்ளனவாம். இதனால், தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அப்செட்டில் இருக்கிறாராம்.

திமுக எதிர்ப்பு - காங்கிரஸ் ஆதரவு

திமுக எதிர்ப்பு - காங்கிரஸ் ஆதரவு

பொருளாதார அடிப்படையில் முற்பட்ட பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு தமிழகத்தை ஆளும் கட்சியான திமுக கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் திமுக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் இந்த முரண்பாடு அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்த இட ஒதுக்கீடு பற்றி காங்கிரஸுக்கு விளக்கி புரிய வைப்போம் என்றும் திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

இன்னொரு தீர்ப்பு

இன்னொரு தீர்ப்பு

இந்நிலையில் தான் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் காங்கிரஸ் - திமுக இடையே பலத்த முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரையும் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. இதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வர்வேற்பு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் பலவும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளன.

காங். கடும் எதிர்ப்பு

காங். கடும் எதிர்ப்பு

ஆனால், காங்கிரஸ் கட்சி இந்தத் தீர்ப்புக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்துள்ள இந்தத் தீர்ப்பு முற்றிலும் தவறானது, சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதது, இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செயல்பட்டுவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியும் இந்த தீர்ப்பை கண்டித்துள்ளது.

புகைச்சல்

புகைச்சல்

ஏற்கனவே, கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டபோது, அவரை முதல்வர் ஸ்டாலின் கட்டித்தழுவியதை, கொலையாளிகளைக் கொண்டாடுவதா என கேள்வி எழுப்பி இருந்தது காங்கிரஸ் கட்சி. அந்தத் தீர்ப்புக்கு எதிராக வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்திலும் ஈடுபட்டனர் காங்கிரஸ் கட்சியினர். இந்நிலையில், மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதும், அதை திமுக வரவேற்றிருப்பதும், திமுக - காங்கிரஸ் இடையே மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் நிலைப்பாடு பற்றி காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனராம்.

பிரச்சனை கிளப்ப திட்டம்

பிரச்சனை கிளப்ப திட்டம்

இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் வரும் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 10 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கு தீர்ப்பு தொடர்பாக இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்குமா பங்கேற்காதா என குழப்பம் நிலவி வரும் நிலையில், அக்கட்சி சார்பில் நவம்பர் 16ஆம் தேதி கே.எஸ்.அழகிரி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், திமுகவின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சனை கிளப்ப தயாராகி வருகிறார்களாம்.

புண்படுத்திட்டாங்க

புண்படுத்திட்டாங்க

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிகே முரளிதன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ராஜீவ் கொலையாளிகள் 30 ஆண்டுகள் சிறையில் இருந்தாலும், அவர்கள் கொலையாளிகள் தான், அவர்களை உயிரோடு விட்டது காங்கிரஸ் செய்த தவறு, தற்போது மத்திய பாஜக அரசும், மாநிலத்தை ஆளும் திமுக அரசும், முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களை விடுவித்து காங்கிரஸ் கட்சியினரின் மனதைப் புண்படுத்தி இருக்கிறார்கள், காங்கிரஸ் தொண்டர்களை கொச்சைப் படுத்தி இருக்கிறார்கள், இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம் எனக் கூறியுள்ளார்.

கண்டன தீர்மானம்?

கண்டன தீர்மானம்?

மேலும், 16ஆம் தேதி நடைபெற இருக்கும் காங்கிரஸ் கூட்டத்தில், ராஜீவ் கொலையாளிகள் விஷயத்தில் திமுகவின் செயலைக் கண்டித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் புகையைக் கிளப்பி இருப்பதால், திமுகவினரும் அதற்கு எதிர்வினை ஆற்றக்கூடும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணிக்குள் ஏற்படும் இந்த சலசலப்புகளால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அப்செட்டாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. கோஷ்டி பூசலுக்கு பெயர் போன காங்கிரஸ் கட்சியில் யார் எப்போது திமுகவை தாக்கி வாயை விடுவார்கள் என தலைமை அச்சத்திலேயே இருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+