தொழிலதிபர் கடத்தல்.. முன்ஜாமீன் என போலி ஆவணம்.. திமுக வட்டச் செயலாளர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!
சென்னை : தொழிலதிபர் கடத்தல், போலி முன் ஜாமீன் ஆர்டர் தயாரித்த விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவரும், திமுக வட்டச் செயலாளருமான கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஏற்கனவே தான் விற்ற சொத்தை, மீண்டும் அதிக விலைக்கு வேறு ஒருவருக்கு விற்பதற்காக, தொழிலதிபரை கடத்தி மிரட்டி கையெழுத்து பெற்ற வழக்கில் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன் ஜாமீன் ஆவணத்தை போலியாக தயார் செய்துள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, திமுக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
10 வயதிலேயே நாடகம்.. பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவத்தில் வெளியான
தொழிபதிபர் கடத்தல்
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அமர்ராம். அதே பகுதியில் அடகுகடை நடத்தி வருகிறார். அமர்ராம், கடந்த 2017-ஆம் ஆண்டு மயிலாப்பூரைச் சேர்ந்த தி.மு.க வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் நாவலூரில் உள்ள 58 சென்ட் நிலத்தை ரூ.60 லட்சம் முன்பணம் கொடுத்து பத்திரப்பதிவு செய்திருக்கிறார். அதற்கு அடுத்த வருடமே நிலத்துக்கான முழு தொகையையும் கொடுத்திருக்கிறார்.
சொத்து வழக்கு
இதற்கிடையே கிருஷ்ணமூர்த்திக்கும் அவரது சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் இந்த சொத்து தொடர்பாக, கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிலத்தை வாங்கிய அமர்ராம் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அவரை மிரட்டிய மர்ம நபர்கள் சென்னை மெரினா கடற்கரைக்கு வரச்சொல்லி, அவரை கத்தி முனையில் காரில் கடத்தி திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
திமுக கவுன்சிலர்
நாவலூரில் உள்ள அவருக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தின் கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வகையில் சான்றிதழில் கையெழுத்து பெற முயன்றுள்ளனர். சென்னை மாநகராட்சி 124-வது வார்டு திமுக கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் மயிலாப்பூர் கிழக்கு பகுதி 124-வது திமுக வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தான் தொழிலதிபரை கடத்தி, அவரது சொத்தை எழுதி வாங்கியவர்கள் எனத் தெரியவந்தது.
போலி ஜாமீன் ஆர்டர்
தொழிலதிபர் அமர் ராம் அவர்கள் மீது புகார் அளித்த நிலையில், இருவரும் இந்த வழக்கின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெற்றனர். எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்த அவர்களின் முன் ஜாமீன் ஆர்டரை மாஜிஸ்திரேட் சரிபார்த்தபோது, முன்ஜாமீன் காலாவதியாகியிருப்பதும், அந்த ஆர்டரை போல தேதி மாற்றி போலியாக ஒரு ஆர்டரை தயார் செய்திருப்பதும் தெரியவந்தது.
சஸ்பெண்ட்
மாஜிஸ்திரேட் உத்தரவின்படி எழும்பூர் போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக 124வது வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.