பலம் பொருந்திய யானை திமுக.. ஏன் தெரியுமா? எடப்பாடி பழனிசாமிக்கு விலாவரியாக விளக்கம் தந்த முதல்வர்!
சென்னை : யானையும் இல்லை; மணி ஓசையும் இல்லை என்று ஆளுநர் உரை பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு சட்டசபையில் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள்; திமுக யாராலும் அடக்க முடியாத யானை என்று விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் உரையில் சிங்காரச் சென்னை 2.0, பொருளாதார ஆலோசனைக்குழு, லோக் ஆயுக்தாவுக்குப் புத்துயிர், மீண்டும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

ஆளுநர் உரை
ஆனால் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரை குறித்து பேசும் போது சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரை பெரும் ஏமாற்றம் அளிக்கிறது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய தி.மு.க-வின் நிலைப்பாடு தற்போது மாறியுள்ளது, தேர்தல் வரும்போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சாக இருக்கிறது. தேசிய வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க தெரிவித்திருந்தது. அது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இல்லை.

மணி ஓசையும் இல்லை
தி.மு.க ஆட்சி அமைந்து ஒரு மாதமாகியும் விவசாயக் கடன் ரத்து செய்த ரசீது வழங்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டார்கள். அது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை. சுயஉதவிக் குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றனர். அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை உயர்த்துவது குறித்து ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார், மேலும் யானையும் இல்லை; மணி ஓசையும் இல்லை என்றும் ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார்.

முன்னோட்டம்
இதற்கு சட்டசபையில் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஐந்து ஆண்டுகளான ஆட்சியில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களை ஆளுநர் உரையிலேயே சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம் மட்டும் தான் என்றும், முழுபடத்தையும் இப்போதே காட்ட முடியாது என்றும் கூறினார். படிப்படியாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார்,

திமுக பலமான யானை
யானையும் இல்லை; மணி ஓசையும் இல்லை என்று ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ததற்கும் முதல்வர் ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். இதுபற்றி கூறும் போது, அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள்; திமுக யாராலும் அடக்க முடியாத யானை. நான்கு கால்கள்தான் யானையின் பலம்; சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப்பற்று ஆகியவை திமுகவின் கால்கள் என்று பதிலடி கொடுத்தார்.












Click it and Unblock the Notifications