5ஜி ஊழல் புகார்.. பாய்ண்டை பிடித்த திமுக! “2ஜி” நினைவிருக்கா? “பாஜக யோக்கிய சிகாமணிகளே பதிலளிங்க”
சென்னை: இந்தியாவில் 5ஜி அலைவரிசை ஏலம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அதில், ரூ.2.80 லட்சம் கோடி ஊழல் நடைபெற்று உள்ளதா என்று திமுக ஐடி விங் கேள்வி எழுப்பி இருக்கிறது.
இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் குழு கடந்த மாதங்களுக்கு முன்பாக ஒப்புதல் வழங்கியது. உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது.
இந்தியாவில் 5ஜி சோதனை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்குபெற்றன. முதல் நாளன்று 4 சுற்றுகளாக 5ஜி ஏலம் நடைபெற்று உள்ளது.
5ஜி அலைக்கற்றை: எதிர்பார்த்த ரூ4.3 லட்சம் கோடி கிடைக்கவில்லை! ரூ 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம்!
ஏலம் நிறைவு
நடந்து முடிந்த 40 சுற்று ஏலத்தில் 4 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக மத்திய தொழில்நுட்பத்துறை தெரிவித்து இருந்தது. முதல் நாள் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டனர் என்றும் இது கடந்த 2015 ல் நடைபெற்ற 4ஜி ஏலத்தின் சாதனையை முறியடித்து இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். நேற்றுடன் 5ஜி அலைவரிசைக்கான நிலையில் இதுவரை மொத்தம் ரூ.1,50,173 கோடி ஏலத்தை மத்திய அரசு பெற்று இருக்கிறது.
அள்ளிய அம்பானி
இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட 5ஜி சேவையை வழங்குவதாக தெரிவித்து உள்ளது. 22 சுற்றுகளிலும் தங்கள் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தியதாகவும், 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz and 26GHz ஆகிய பேண்டுகளை தங்கள் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் இதில் 700MHz பேண்ட் சிறப்பான 5ஜி சேவையை வழங்க உதவும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
அக்டோபரில் சேவை
5ஜி அலைவரிசையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியை ஆகஸ்டு 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும் எனவும் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் கூறினார். இந்த நிலையில், தற்போது அக்டோபர் மாதம் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று கூறி இருக்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டு
இதற்கிடையே 5ஜி ஏலத்தில் ஊழல் நடந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ட்விட்டரில் #5G_Scam_Bjp என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ஆயிரக்கணக்கானோர் பதிவிட்டு உள்ளனர். அதில், இந்த ஏலத்தில் ரூ.4.3 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ரூ.1.5 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளதை பலர் காரணமாக சொல்கின்றனர். இதுகுறித்து பேஸ்புக்கில் திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா பதிவிட்டுள்ளதாவது, "பா ஜ க அரசின் இமாலய ஊழல்!! ரூ.2.80 லட்சம் கோடி ஊழல்!!! பாஜக போல் பேசுங்கள். 2ஜி போல் பேசுங்கள்," என்று பதிவிட்டுள்ளார்.
திமுக ஐடி விங்
இதுகுறித்து திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், "2008ல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்றார் சி.ஏ.ஜி.யின் வினோத்ராய். 2022ல் பா.ஜ.க. ஆட்சியில் 5ஜி ஸ்பெக்டரம் ஏலத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்பானி, அதானி, மிட்டல் கூட்டாளிகள் எடுத்த ஏலத்தில் கிடைத்திருப்பதோ வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. அப்படியென்றால் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழலா? அப்போது தி.மு.க. மீது பொய்ப்பழிப் போட்ட பா.ஜ.க யோக்கியசிகாமணிகளே இப்போது பதில் சொல்லுங்க." என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.