திமுகவை அதிர்ச்சி அடைய வைத்த அந்த செய்தி.. உடனே மறுப்பு சொல்லி டி.ஆர்.பாலு விளக்கம்
சென்னை: மத்திய அமைச்சரவையில் 6 மாதத்திற்கு பிறகு திமுக சேருவதாக வெளியான பத்திரிக்கை தகவல் உண்மை இல்லை என திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். திமுக என்பது ஒளிவு மறைவற்ற, நேர்மையான ஜனநாயகத்தின் ஊற்று கண் என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதிமுக பாஜக கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் திமுக இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும், 6 மாதத்துக்கு பின் பாஜகவின் அமைச்சரவையில் திமுக இணையக்கூடும் என்ற ரீதியில் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. இதற்கு திமுக திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்பியும், திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவருமான டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூடுவதற்கு முன்னால் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற ஆதரவு கேட்பது வழக்கமான ஒன்று
அந்த நடைமுறைப் பழக்கப்படி நாடாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்.பிரகலாத் ஜோஷி, இணை அமைச்சர் திரு.அர்ஜீன்ராம் என்னுடன் கலந்து பேசியதும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதும் உண்மைச் செய்திகள்.அவர்கள் என்னிடம் பேசிய போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்தெந்த தேதிகளில் எத்தகைய நிகழ்வுகள் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கிறது என்பதை தெரியப்படுத்தினர்
ஆனால் ஆறு மாதம் கழித்து திமுக உறுப்பினர்கள் பாஜக மத்திய அமைச்சரசையில் இடம் பெறுவார்கள் என்ற தவறான செய்தி பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின் அடியொற்றி பயணிக்கின்ற உண்மை தொண்டர்களும் வெளிப்படையானவர்கள் மட்டுமல்ல; ஒளிவு மறைவற்ற, நேர்மையான ஜனநாயகத்தின் ஊற்று கண்கள் என்பவற்றை வரலாறு அறியும். இதில் ஜனநாயக குருடர்களுக்கு வேலை இல்லை'' இவ்வாறு கூறியுள்ளார்.