சூர்யா சிவா ஆபாச பேச்சு.. பாய்ண்டை பிடித்த திமுக! கையை வெட்டாதீங்க - அண்ணாமலை, குஷ்புவிடம் கேள்வி
சென்னை: பாஜக பெண் நிர்வாகியிடம் பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா தரக்குறைவாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பெண்களை தவறாக பேசிய திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்தாவது நீக்குவீர்களா என அண்ணாமலையிடம் திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக மூத்த பேச்சாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த மே மாதம் 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார்.
திருச்சி சூர்யாவை அண்ணாமலை நீக்குவாரா? டெய்சிக்காக குஷ்பு குரல் கொடுப்பாரா? ராஜீவ்காந்தி கேள்வி!
பாஜகவில் பதவி
இவருக்கு பாஜக ஓபிசி பிரிவில் மாநில பொதுச்செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. சூர்யா சிவா தொடர்ந்து திமுகவையும் கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். ட்விட்டரிலும் சூர்யா சிவா தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்து இருக்கிறார்.
டெய்சியுடன் மோதல்
இந்த நிலையில் சூர்யா சிவாவுக்கும் பாஜகவை சேர்ந்த டெய்சிக்கும் இடையே கட்சி விவகாரங்கள் தொடர்பாக மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையே டெய்சியை சூர்யா சிவா கடுமையான ஆபாச வார்த்தைகளை கொண்டு திட்டி, கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆபாச பேச்சு
சிறுபான்மை அணி தலைவியான டெய்சி சரண் என்பவருடன் சூர்யா சிவாவுக்கு கட்சி பொறுப்புகள் வழங்குவதில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான செல்போன் உரையாடலில் டெய்சி மீது அவதூறு பரப்பும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் விதமாகவும், எங்கள் ஆட்களை இறக்கி காட்டுகிறேன் என்றும் பேசி உள்ளார் சூர்யா சிவா.
சமூக வலைதளங்களில் பரபரப்பு
இந்த உரையாடலில் தேசிய பாஜக தலைவர்கள் முதல் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்கள் வரை பலரது பெயர்களை அவர் பயன்படுத்தி இருக்கிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. பலரும் இதனை பகிர்ந்து சூர்யா சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பாஜக போராட்டம்
பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமிதா உள்ளிட்டோர் மீது திமுக பேச்சாளர் சைதை சாதிக் தரக்குறைவாக பேசியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் திருச்சி சிவாவை கட்சியிலிருந்து நீக்குவார்களா? என்று பலரும் அண்ணாமலையை டேக் செய்து ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திமுக ராஜீவ் காந்தி
இந்த நிலையில், திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டு உள்ளார். அதில், "பெண்களை தவறாக பேசினால் கையே வெட்டுவேன் என்பது தானே உங்கள் கொள்கை முழக்கம்! பெண்களை தவறாக பேசிய திருச்சி சூர்யா என்கிற குற்றவாளியின் கையை வெட்ட வேண்டாம் கட்சியில் இருந்தாவது நீக்குவீங்களா அண்ணாமலை அவர்களே? பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக குஷ்பு அவர்கள் குரல் கொடுப்பார்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணாமலை உத்தரவு
இந்த நிலையில் சூர்யா சிவாவை 6 மாதங்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு இருக்கிறார். இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விசாரிக்கப்படும் என்றும், அதுவரை கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் அவருக்கு தடை விதிப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.