என்ன நெருக்கடி தந்தாலும் இடஒதுக்கீட்டு உரிமையை விட்டு தர கூடாது.. ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை, தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னேறிய பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசிக்க நடைபெற்று வரும் அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு கடந்த 30 ஆண்டுகளாக தங்கு தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
மத்திய அரசின் புதிய சட்டம் இடஒதுக்கீட்டு கொள்கையை நீர்த்து போக செய்து விடும். எனவே மத்திய அரசின் புதிய சட்டத்தை தமிழக அரசு அனுமதிகக் கூடாது என வலியுறுத்தினார்.
மேலும் பேசிய ஸ்டாலின் 25 சதவீத எம்பிபிஎஸ் இடங்களை கூடுதலாக தருவதாக மத்திய அரசு சொல்வதை நம்பி, 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க கூடாது. காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை.
எனவே நமது முன்னோர் நமக்கு வழங்கி இருக்கும் இடஒதுக்கீட்டு உரிமையை நாம் எந்த காலத்திலும், எத்தகைய நெருக்கடிகளுக்காகவும் விட்டு தர கூடாது என கூறியுள்ளார் ஸ்டாலின்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மேலும் சமூகநீதி கொள்கையில் கை வைக்க இதுவரை நாட்டில் இருந்த 14 பிரதமர்களும் துணிந்ததில்லை. எனவே சமூகநீதியை காக்க அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் எதிர்கட்சியான திமுக முழுஒத்துழைப்பு கொடுக்கும் என்றார்.