Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செப். 20ல் திரளும் திமுக கூட்டணி கட்சிகள்: மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்-அதிகரிக்குமா நெருக்கடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசுக்கு எதிராக வரும் 20-ந் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன. இந்த போராட்டமானது மத்திய அரசுக்கு நெருக்கடியை தரக் கூடியதா? அல்லது வழக்கமான ஒருநாள் போராட்டமாக கூடி கலைந்து போவார்களா? என்பது விவாதமாகி உள்ளது.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி முயற்சிகள் பல்வேறு நிலைகளில் டெல்லியில் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலில் சரத்பவார் இதற்கான முன் முயற்சிகளை எடுத்தார்.

சரத்பவாரைத் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. டெல்லியில் அமர்ந்து கொண்டு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசி லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என வலியுறுத்தினார். அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் தற்போதைய களநிலவரமே தலைகீழாகப் போகும் என கணித்திருந்தார் மமதா.

15 எதிர்க்கட்சிகள் ஐக்கியம்

15 எதிர்க்கட்சிகள் ஐக்கியம்

இதன்பின்னர் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது 15 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு, பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் ஆகியவற்றில் 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தினர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திலும் 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக பேருந்தில் போய் பங்கேற்றனர்.

சோனியா ஆலோசனை

சோனியா ஆலோசனை

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது உள்ளிட்ட மத்திய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக செப்டம்பர் 20-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

டெல்லி செல்லும் ஸ்டாலின்

டெல்லி செல்லும் ஸ்டாலின்

இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வரும் 16-ந் தேதி டெல்லி செல்கிறார் என்கின்றன தகவல்கள். டெல்லியில் செப்டம்பர் 17-ந் தேதி திமுக அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் ஸ்டாலின் அழைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பதால் பா.ஜ.க.வையும் அரசியல் நாகரிகம் கருதி அதன் கூட்டணி கட்சிகளையும் அழைக்கலாம் என்கிற கோரிக்கையும் ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் மாச்சரியங்களை மறந்து முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சியினருடனும் இணக்கமாக இருப்பது தேசிய அளவிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த இமேஜை உயர்த்தும் வகையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

செப்.20ல் போராட்டம்

செப்.20ல் போராட்டம்

இன்னொருபக்கம் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மீதும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் சட்டசபையில் மத்திய அரசுக்கு தீர்மானங்களை நிறைவேற்றினால் போதுமா? அதை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டுமா இல்லையா? என கேள்வி கேட்டிருந்தது. இந்த கேள்வி இப்போது திமுகவுக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக சட்டசபை பேச்சுகளில் அனல் கக்கும் திமுக, நடைமுறையில் மத்திய அரசிடம் போராடி சாதித்தது எது? என்கிற கேள்வி எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. மேலும் திரைமறைவில் பாஜகவுடன் ஒருவித மென்போக்கை தமிழகத்தில் ஆளும் திமுக அரசு கடைபிடிக்கிறதா? என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக செப்டம்பர் 20-ந் தேதி போராட்டத்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அறிவித்துள்ளன. டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் திமுக, தி.க,, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை பங்கேற்கின்றன. இந்தப் போராட்டம் மத்திய பா.ஜ.க.அரசுக்கு எதிராக அனைத்து தமிழக எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்படுகிற போராட்டம். அந்த வகையில் பா.ஜ.க.அரசுக்கு எதிரான மிகப் பெரிய போராட்டம்.

கூடி கலையும் போராட்டம்?

கூடி கலையும் போராட்டம்?

ஆனால் கடந்த காலங்களைப் போல மாவட்ட தலைநகரங்களில், வட்டார தலைநகரங்களில், பேரூர் தலைநகரங்களில் என பட்டிதொட்டி எங்கும் ஒரு போராட்டம் நடத்தி இருக்கலாம்; அதேபோல் செப்டம்பர் 20 முதல் 30-ந் தேதி வரை பல்வேறு கட்ட போராட்டங்களை இடைவிடாமல் நடத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் மத்திய அரசுக்கு ஒரு மெய்யான நெருக்கடியை திமுக கூட்டணிகள் கொடுத்திருக்க முடியும். ஆனால் வீடுகள் முன்பாக தனித்தனியாக நின்று பதாகை ஏந்தி போராடுகிறோம் என அறிவித்திருக்கிறது திமுக கூட்டணி. கொரோனா காலம் என்பதால் இந்த முறையிலான போராட்டம் கையிலெடுக்கப்படுகிறது என சாக்குப் போக்கு சொல்லலாம்.. ஆனாலும் இத்தகைய போராட்டம் மத்திய பாஜக அரசுக்கு எந்தவித நெருக்கடியையும் தராத சில மணிநேரம் கூடி கலையும் பொழுதாகவே அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தேர்தலுக்கான ஒத்திகை?

தேர்தலுக்கான ஒத்திகை?

அதேநேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணிகள் வலிமையாக உள்ளன. இதனை வாக்காளர்களுக்கு வெளிப்படுத்துகிற ஒரு கூட்டணி ஒத்திகையாகவும் பார்க்க முடியும். திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகளையும் இந்த போராட்டம் உருவாக்கி கொடுப்பதையும் நிராகரித்தும் விடமுடியாது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+