இனி விரல்நுனியில் அரசு நிர்வாகம்! - ‘சி.எம் டேஷ்போர்டு’ பற்றி உங்களுக்குத் தெரியுமா?
சென்னை : தரவுகளின் அடிப்படையில் திட்டமிடுவது, அதற்குச் செயல்வடிவம் தருவது இவைதான் நவீன அரசு நிர்வாகத்தின் தனித்தன்மை. அரசாங்கத்திலுள்ள ஒவ்வொரு துறையும் சரியாகச் செயல்படுகிறதா? அதன் திட்டங்கள் சரியாகப் போய்ச் சேருகிறதா? என்பது தெளிவாகத் தெரிந்தால்தான், அரசு தனது நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த முடியும்.
தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும் சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறது. அரசின் திட்டங்களை எதிர்நோக்கி பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். குறிப்பாக முதியவர்கள், விவசாயிகள், தொழிலாளிகள்,பெண்கள், மாணவர்கள் பற்றிய தரவுகள் அரசின் கைவசம் உள்ளன.
ஆனால் இந்தத் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, சரியான முறையில் வகைப்படுத்தி, அரசாங்கத்தின் திட்டங்கள் முறையாகக் குறிப்பிட்ட பிரிவு மக்களுக்குச் சென்றடைகிறதா என்பதை 'சொடக்குப் போடும்' நொடியில் தேடி எடுக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும். தற்போது இந்த வசதிகள் தமிழக அரசு நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பேரதிர்ச்சி.. தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விடுமோ? உதயகுமார் எழுப்பிய சந்தேகம்!
ஆன்லைன் தாமதத்திற்கு என்ன காரணம்?
இதை எளிமையாக எப்படிப் புரியவைக்கலாம் என்றால், இப்போதைக்கு ஒருவர் அரசின் ஏதாவது சேவை வேண்டி ஆன்லைன் மூலம் தனது விண்ணப்பத்தை அனுப்புகிறார். அதற்கு அடுத்து அவ்விண்ணப்பம் சில படிநிலைகளைக் கடந்துதான் ஒரு தீர்வை எட்டும். அதாவது ஒருவர் குறிப்பிட்ட சான்றிதழ் கேட்டு அரசிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் ஆன்லைனில் அனுப்பிவிட்டு, உடனே நடந்துவிடும் என நம்பிக் கொண்டிருப்பார்.
ஆனால் கடந்த ஆட்சிக்காலம் வரை அந்த விண்ணப்பத்தை அளிப்பதற்கான வசதி மட்டும்தான் ஆன்லைனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைப் பரிசீலிப்பது, அவர் தகுதியானவர்தான் எனக் கண்டறிவது, பிறகு அவருக்கான சான்றிதழை வழங்குவது என சில படிநிலை உள்ள அதிகாரிகளைக் கடந்து விண்ணப்பம் செல்லவேண்டி இருக்கலாம்.
இதில் விண்ணப்பம் போடுவது மற்றும் அடுத்த சில படிநிலைகளுக்கு மட்டுமே ஆன்லைன் வசதியுள்ளது. இடையில் ஏதோ ஒரு படிநிலை மட்டும் இன்னும் நேரடி அணுகுமுறையாக உள்ளது என்றால், விண்ணப்பதாருக்கு உரிய நேரத்தில் பலன் போய்ச் சேராது. அங்கு தாமதம் ஏற்படும். விண்ணப்பதாரர், ஆன்லைன் விண்ணப்பம் மிக விரைவாகச் செயல்வடிவம் பெற்றுவிடும் என்று நினைத்துக் கொண்டிருப்பார். அவருக்கு இந்த நிர்வாக ரீதியான உள்ள சிக்கல்கள் புரிவதில்லை.
தாமதம் ஏற்படும் போது, அவர் நேரடியாக அலுவலகம் வந்து தனது விண்ணப்பத்தை அடுத்த படிநிலைக்கு நகர்த்த முயற்சி செய்வார். இம்மாதிரியான சிக்கல்கள் ஆன்லைன் நிர்வாகச் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களாக உள்ளன. அதை அறியாமல் விண்ணப்பதாரர் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் விமர்சித்து தனது வேதனையை வெளிப்படுத்துவார்.
நுட்பமாகக் கண்காணிக்கும் ‘திராவிட மாடல்’
ஆக, இதைப்போன்ற பல நடைமுறைச் சிக்கல்களை, தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இன்றைய திமுக அரசு மிக நுட்பமாகக் கண்டறிந்து தீர்வு காணும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்குத் தீர்வு என்ன என்பதை ஆராய, தமிழக மின்- ஆளுமை முகவையின் மேலாண்மையில் சிறப்பான ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. அதற்குப்பெயர்தான் 'சி.எம்.டேஷ்போர்டு'. அதாவது முதலமைச்சரின் தகவல் பலகை.
அதாவது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை விரல்நுனியில் நவீனத் தொழில்நுட்ப அளவில் உருவாக்குவது. அரசு நிர்வாகத்தை மேக்ரோ லெவலில் இருந்து மைக்ரோ லெவல் வரை மிக நுட்பமாக இதைக் கொண்டு கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும்.
இந்தத் தகவல் பலகைக் கருவியானது மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய போன்ற வளர்ந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளன. தரவுகளின் அடிப்படையில் திட்டங்களையும் சேவைகளையும் வடிவமைத்து தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை உலகத்தரம் வாய்ந்ததாக உறுதிசெய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 'திராவிட மாடல்' அரசு தீவிரமாகச் செயல்புரிந்து வருகிறது.
இதனால் என்ன பயன்? யாருக்குப் பயன்?
ஒரு விண்ணப்பதாரர் ஆன்லைனில் அவரது விண்ணப்பத்தை அளிப்பது தொடங்கி, அதன் எல்லா படிநிலைகளும் கண்காணிக்கப்படும். ஒருவரின் விண்ணப்ப கோப்பு படிப்படியாக நகர்ந்து சென்று எந்த அதிகாரியிடம் தேங்கி நிற்கிறது என்பதை அறியமுடியும்.
எந்த அதிகாரி மிக விரைவாக பணியை முடிக்கிறார்? எங்கே தாமதம் ஏற்படுகிறது என்பதை மிக எளிமையாகக் கண்டறிய முடியும். அப்படி ஒரு குறிப்பிட்ட அதிகாரியிடம் ஏன் தேங்குகிறது? அவரது தாமதத்திற்கு என்ன காரணம்? அதை விரைவுபடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் துல்லியமாக இந்த 'டேஷ்போர்டு' சுட்டிக்காட்டும்.
இதன் மூலம் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாவட்டம் எப் படிநிலைகளில் தரவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து அரசுத் துறைகளின் திட்டங்கள், சேவைகள், தரவுகள் மற்றும் அவை செயல்படுத்தப்படும் முறைகள், அதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் இடர்பாடுகளைக் காணக்கூடிய வசதி இந்த 'டேஷ்போர்டில்' உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புள்ளிவிவரத்தால் மாற்றம் வருமா?
கட்டாயம் வரும். ஏன், ஏற்கெனவே அதன் பலன் கிடைத்துள்ளது. உதாரணமாக ஒரு விஷயம். நாம் இது தொடர்பாக சில அதிகாரிகளை அணுகி விவரங்களைச் சேகரித்தோம். அவர்கள் குறிப்பிட்ட தகவல் மிகமிக உற்சாகம் அளிப்பதாக இருந்து.
அதாவது தமிழக முழுவதும் செயல்படும் நியாய விலை கடைகளில் பயனாளிகளின் எண்ணிக்கை 800 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேலாக இருந்தால் அந்தக் கடையில் இரு ஊழியர்கள் இருக்க வேண்டும். அதேபோல் 800க்கும் குறைவாக இருந்தால் ஒரு ஊழியர் இருக்க வேண்டும் என்பது அரசு வகுத்துள்ள விதி. இந்த அடிப்படையில் வைத்துப் பார்த்தால் பரவலாகத் தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 44 ஆயிரம் இருக்க வேண்டும். ஆனால் சுமார் 22 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
இந்தப் பற்றாக்குறை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள 'டேஷ்போர்டு' மூலம் கிடைத்த புள்ளிவிவரம். ஊழியர்களின் பற்றாக்குறையே நிர்வாக தாமதத்திற்குக் காரணம் என்பதைத் தகவல் பலகை சுட்டிக்காட்டுகிறது. உடனே இந்தத் தரவுகள் முதலமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகச் செல்கிறது. அதை வைத்தே சமீபத்தில் முதல்வர், பணி இடங்களை நிரப்புவதற்கான நியமன ஆணையை வழங்கி உள்ளார்.
தரவுகளின் அடிப்படையில் திட்டம்
இந்த 'டேஷ் போர்டு' தரவுகள் எப்படித் தரமான அரசு நிர்வாகத்திற்கு உதவுகின்றன என்பது இப்போது புரிகிறதா? ஆக, இந்தத் 'திராவிட மாடல்' ஆட்சியானது தரவுகளின் அடிப்படையில் அனைத்து நிர்வாகத்தையும் கொண்டுவர உள்ளது.
ஏற்கெனவே சுகாதாரத்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை உட்பட 100 டேஷ்போர்டுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் 200 டேஷ்போர்டுகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்கிறார் நம்மிடம் பேசிய மூத்த கொள்கை திட்ட ஆய்வாளர்.
தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த டேஷ்போர்டு செயல்வடிவம் பெற்றுள்ளதா எனச் சிலருக்குச் சந்தேகம் உருவாகலாம். இதற்கு முன்பே மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் அரசுகள் இந்த 'டேஷ்போர்டு' திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளன.
அரசு நிர்வாகத்தை எளிமையாக்கும் ‘டேஷ்போர்டு’
ஆனால் அந்த மாநிலங்களில் இல்லாத ஒரு தனித்தன்மை நமது 'சி.எம். டேஷ்போர்டு'க்கு உண்டு. அது என்னவென்றால், மற்ற மாநிலங்களில் இந்த டேஷ்போர்டு தரவுகள் ஒரு திட்டத்திற்கு எத்தனைப் பெயர் விண்ணப்பித்துள்ளனர்? அவர்களில் எத்தனைப் பேருக்கு இதன் பயன் கிடைத்துள்ளது என்ற விவரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால், தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 'டேஷ்போர்டில்' உள்ள தரவுகள் வெறும் பயனாளிகளின் பட்டியல்கள் சார்ந்த விவரங்களை மட்டும் தெரிவிக்காது. அதில் பயனாளி யார்? பயனாளியாகத் தகுதி பெறாதவர் யார்? அந்தப் பயனாளிக்கு இதன் பலன் எத்தனை நாட்களில் போய்ச் சேர்ந்துள்ளது? தாமதத்திற்கான காரணங்கள் என்ன போன்ற நுட்பமான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
சுருக்கமாகச் சொன்னால் வெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விபரங்களை மற்ற மாநிலங்கள் டேஷ்போர்டில் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழக அரசு இதைக் கொண்டு நவீன தரவுகளின் அடிப்படையிலான அரசு நிர்வாக செயல்பாட்டிற்கு ஒரு வடிவத்தைக் கட்டமைக்க முயன்றுள்ளது. இந்த வேறுபாடுதான் மிகமிக முக்கியமானது என்கிறார் நம்முடன் பேசிய மற்றொரு ஆய்வாளர்.
டேஷ்போர்டின் எதிர்கால திட்டம் என்ன?
அது குறித்த விவரங்களை அறிய இந்தத் தொழில்நுட்பத்திற்குச் செயல்வடிவம் தந்துவரும் ஒரு நிபுணரிடம் பேசினோம். அவர் அதன் எதிர்கால திட்டம் குறித்து மிகச் சிறப்பான தகவல்களைக் கூறினார்.
அதாவது இப்போதைக்குத் தமிழக அரசு அனைத்து துறைகளிலுள்ள தரவுகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதே இவர்களின் திட்டம். அடுத்த இலக்காக மற்ற மாநிலங்களின் தரவுகளைக் கொண்டு நம் மாநிலத்தின் வளர்ச்சியை ஒப்பிடுவது. அதன் மூலம் நமது குறைகளைக் களைவது. அப்படி ஒப்பிடும் போது நம்மைவிடச் சக்தி குறைவான மாநிலத்துடன் ஒப்பிடாமல், ஜிடிபியில் நம் மாநிலத்துடன் சம அளவில் உள்ள மாநிலத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வது அரசுக்குத் திட்டம் வகுக்க உதவுவது.
அதன் அடுத்தகட்டமாக, நமது மாநில பொருளாதார சக்த் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் சம அளவில் உள்ள பிறநாடுகளுடன் நம் மாநில வளர்ச்சியை ஒப்பிட்டு, நமது எதிர்காலத் திட்டங்களுக்கு அடித்தளம் அமைப்பது. அதுவே இந்த டேஷ்போர்டின் இலக்காக இருக்கும் என்கிறார் நம்மிடம் பேசிய தொழில்நுட்ப செயல்திட்ட நிபுணர்.
செயற்கை நுண்ணறிவு
முதலமைச்சரின் தகவல் பலகைத் திட்டமானது வரவிருக்கின்ற நாள்களில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்ய இருக்கின்றது. வரும் காலங்களில், ஒரு துறையில் வழங்கப்படுகின்ற பல திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கு இடையே ஆன தொடர்புகளையும் கண்டறிந்து, எளிமையான, சிறந்த அரசு நிர்வாகத்திற்கு உதவிடும் கருவியாகச் செயல்பட உள்ளது.
மேலும், தரவு தூய்மை மூலம் அரசின் திட்டங்களும் சேவைகளும் தேவையான குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே சென்று சேருகின்றதா என்பதை உறுதி செய்திட வழிவகை செய்ய உள்ளது.
ஆக, இந்த முதலமைச்சரின் தகவல் பலகை திட்டம் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற உதவிபுரியும் என உறுதியாக நம்பலாம்.