‘தலை’யை சந்திக்க திட்டம் போட்ட ஓபிஎஸ் டீம்.. தொக்கா மாட்டிய சான்ஸ்.. இனி தான் எடப்பாடிக்கு சிக்கலே!
சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள், அரசு நிர்வாகம் மீது அருணா ஜெகதீசன் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் ஓபிஎஸ் அதுபற்றி தீவிரமாக ஆலோசித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஓபிஎஸ் டீம் தயாராகி வருகிறதாம்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அப்போது சொன்ன கருத்து பொய் என அருணா ஜெகதீசன் ஆணையம், அறுதியிட்டு கூறியிருப்பதால், எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் உறுதி என ஓபிஎஸ் தரப்பில் பேசியுள்ளனர்.
திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துக் களமாட முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
யார் எல்லாம் சமூக விரோதி? ரஜினி கருத்தில் தவறு இல்லை.. அருணா ஜெகதீசன் அறிக்கை பற்றி அண்ணாமலை!
கலவரம் - துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துப்பாக்கிச் சூடு தொடர்பான ஆணைய அறிக்கை, போலீசார், காவல்துறை உயரதிகாரிகளே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு முழுக் காரணம், போலீசார் திட்டமிட்டே துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர் என அம்பலப்படுத்தியுள்ளது.
சிக்கிய எடப்பாடி
அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூடு பற்றி தெரிந்துகொண்டேன் எனக் கூறியதும் பொய் என அம்பலப்படுத்தியிருக்கிறது அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை. தூத்துக்குடி போராட்டம், துப்பாக்கிச்சூடு பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் முதல்வருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது என சாட்சியங்களின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளது அருணா ஜெகதீசன் ஆணையம். இதன் மூலம் மக்களின் கோபம் தன் மீது திரும்பி விடக் கூடாது என்பதற்காகவே, எடப்பாடி பழனிசாமி அவ்வாறு கூறியது தெளிவாகியுள்ளது.
ஓபிஎஸ் ஆலோசனை
ஆறுமுகசாமி ஆணையம் + அருணா ஜெகதீசன் ஆணையம் என இரு விசாரணை ஆணையங்களின் அறிக்கை வெளியானது முதல் தொடர்ச்சியாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார் ஓபிஎஸ். ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் ஓபிஎஸ் பெயர் அடிபட்டாலும், சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரே மெயினாக சிக்கியுள்ளனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் பற்றி ஆலோசித்த ஓபிஎஸ், தான் கொடுத்த வாக்குமூலத்தை முழுமையாக ஆணையம் வெளியிடவில்லை எனக் கூறியுள்ளார்.
சிக்கல் இல்லை
குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரிடம், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வது பற்றி பேசினாராம். அந்த தகவலை ஆணையம் பதிவு செய்யவில்லை என ஓபிஎஸ் தரப்பினர் பேட்டிகளின்போது கூறி வருகின்றனர். தன்னைப் பற்றி ஆணையம் பெரிதாக எந்தக் குற்றச்சாட்டும் வைக்காததால் மீண்டும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டாலும் தனக்கு எதுவும் சிக்கல் இருக்காது என்ற நிலையிலேயே ஓபிஎஸ் இருக்கிறாராம்.
வளையத்திற்குள் ஈபிஎஸ்
அதேசமயம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் வரை விசாரணை சென்றால் நிச்சயமாக ஈபிஎஸ்ஸும் விசாரணை வளையத்திற்குள் வந்துவிடுவார் என ஓபிஎஸ் தரப்பு கணக்குப் போட்டுள்ளது. இப்போதே, போலீசார் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதால் ஓபிஎஸ் தரப்பு உற்சாகமாகியுள்ளது.
அழுத்தம் கொடுக்க திட்டம்
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கையை தீவிரப்படுத்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என ஓபிஎஸ் தரப்பில் முடிவு செய்துள்ளனராம். திமுக கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே இதுகுறித்துப் பேசி வரும் நிலையில், நாமும் இதை முக்கிய விவாதமாக கொண்டு போகலாம். எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்பட ஏற்பட நமக்கு மைலேஜ் ஏறும், இந்த பிரச்சனையை நாம் லேசாக விட்டுவிடக்கூடாது, இதுதான் நமக்கு கிடைத்திருக்கும் முக்கியமான துருப்பு என ஆலோசித்துள்ளனர்.
ஹாட் டாக்
நம்மை திமுகவோடு கூட்டு சேர்ந்திருப்பதாக விமர்சித்துத்தான் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த பார்க்கிறார்கள். துப்பாக்கிச்சூடு விவகாரத்தை வைத்து பொதுமக்கள் மத்தியிலேயே எடப்பாடி பழனிசாமியின் இமேஜை டேமேஜ் செய்யலாம். தொடர்ச்சியாக நாம் இதுபற்றியே பேச வேண்டும், ஈபிஎஸ் திமுக அரசின் விசாரணைக்குள் போய்விட்டால் அதன்பிறகு நமக்கு வெற்றிதான் எனப் பேசியுள்ளனர்.
ஸ்டாலினை சந்திக்க
இரு ஆணைய அறிக்கைகளின் மீதும் அரசு பாரபட்சமில்லாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீங்களே சென்று முதல்வரிடம் வலியுறுத்தங்கள் என ஓபிஎஸ்ஸிடம், அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஈபிஎஸ் டீம் தான் ஸ்டாலினை ரகசியமாக சந்தித்ததாக விமர்சிக்கும் நேரத்தில் ஸ்டாலினை நான் நேரடியாக சந்திப்பது சரியாக இருக்காது, நம் சைடில் இருந்து முக்கியமான தலைவர்கள் சென்று கோரிக்கை வைக்கலாம் என ஓபிஎஸ் கூறியிருக்கிறாராம்.
ஓபிஎஸ் டீம் திட்டம்
அதன் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஓபிஎஸ் டீம் நேரம் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் வாரத்தில் ஓபிஎஸ் தரப்பின் முக்கிய புள்ளிகள் ஸ்டாலினை சந்திக்கும் நிகழ்வு நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. ஸ்டாலினை சந்தித்து, இந்த 2 விவகாரங்களிலும் விசாரணையை தீவிரப்படுத்தி, யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க இருக்கின்றனராம். இதன் மூலம் தங்கள் பக்கம் பயமில்லை என்பதையும் ஓப்பனாக காட்டிவிடலாம் என திட்டமிட்டுள்ளனராம்.
உறுதி செய்த லீடர்
முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஓபிஎஸ் டீம் திட்டமிட்டிருப்பதை இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜும் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தவறு செய்தவர்கள் மீது நீதிபதிகள் பெஞ்ச் அமைத்து 6 மாத கால காலத்திற்குள் விசாரித்து குற்றவாளிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.