பாலாறு குறுக்கே அணை.. இபிஎஸ் அறிக்கையை பார்த்து அழுவதா? சிரிப்பதா? அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!
சென்னை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டச் செய்தியைக் கொண்டு திமுக அரசு என்ன சாதித்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து அழுவதா ? சிரிப்பதா? என்று தெரியவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பாலாற்றின் குறுக்கே கூடுதல் நீர்தேக்கம் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறித்து நன்கு அறிந்தும், திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினும், நீர்வளத்துறையும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்தபோதும் நிதானத்தோடு தான் நடந்து கொண்டிருந்தார்.

நிதானம் இல்லை
அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மொத்தவும் தடுமாறிப் போயிருக்கிறார். நிதானம் தவறியிருக்கிறார் என்பது, அவர் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிகிறது. தளபதியின் அரசு "கையாலாகாத அரசு" "விடியா அரசு"! கும்பகர்ணன் கொண்ட அரசு" என்று வார்த்தைகளை அறிக்கையில் கொட்டி இருக்கிறார்.

அழுவதா? சிரிப்பதா?
ஆந்திர அரசு, ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்டப் போவதாக அம்மாநில முதலமைச்சர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அது ஒரு பொதுக்கூட்டச் செய்தி கொண்டு, தளபதி அரசு என்ன சாதித்துவிட்டது என்று அவசரக் குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு, அழுவதா ? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

தேவை நடவடிக்கை எடுப்போம்
இப்படித்தான் முன்னர் ஒரு முறை இதே கணேசபுரத்தில் அணை கட்டப்போவதாக வந்த செய்றியைப் பார்த்து சில அறிக்கைத் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து தளபதி அவர்களும், நானும் கணேசபுரம் போய்ப் பார்த்தபோது, அப்படி ஒரு அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இவ்வரசு தீவிரமாகக் இவ்வாறு கண்காணித்துக் கொண்டிருக்கிறது, தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும்.

நிர்வாக நடைமுறைகள்
இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் எடப்பாடியாருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் எந்த அணையையும் கட்டவில்லை. அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டுப் போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படித் தெரியும்? வார்த்தைகளைக் கொட்டுவது சுலபம்; அதைத் திரும்ப அள்ளுவது கஷ்டம் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications