சட்டசபை தேர்தல்: ஒட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் போட்டி?
சென்னை: சட்டசபை தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் அட்டவணையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பது டாக்டர் கிருஷ்ணசாமியின் நீண்டகால கோரிக்கை. ஆனால் மத்திய அரசு 7 பிரிவினரை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என மட்டும் அழைக்க ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
ஷ்யாம் கிருஷ்ணசாமி
இதில் டாக்டர் கிருஷ்ணசாமி அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் மகன் ஷ்யாமை களமிறக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஒட்டப்பிடாரமும் கிருஷ்ணசாமியும்
1996, 2011 ஆகிய சட்டசபை தேர்தல்களில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் கிருஷ்ணசாமி. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுந்தரராஜனிடம் வெறும் 493 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. 2001 சட்டசபை தேர்தலிலும் அதிமுக வேட்பாளரிடம் வெறும் 651 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.
ஷ்யாம் போட்டி?
இம்முறை அதிமுக கூட்டணியிலேயே புதிய தமிழகம் கட்சி இடம்பெறக் கூடிய சாத்தியம் இருக்கிறது. இதனால் அதிமுக, புதிய தமிழகம் வாக்குகள் இணைந்து கிடக்கும் நிலையில் வெற்றி எளிதாக இருக்கும் என்பது டாக்டர் கிருஷ்ணசாமியின் கணக்கு என்கிறார்கள். அதனால் மகன் ஷ்யாமை ஒட்டப்பிடாரம் தொகுதியில் நிற்க வைத்துவிட்டால் வெற்றி எளிது என்கிற முடிவில் இருக்கிறாராம் டாக்டர் கிருஷ்ணசாமி.
புதிய தமிழகம் கட்சி நிலை
புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டு மேடைகளில் தொடர்ந்து ஷ்யாம் கிருஷ்ணசாமியும் பங்கேற்று வருகிறார். அவரை அடுத்த தலைவராக புதிய தமிழகம் கட்சியினரும் ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.