ஓபிஎஸ் பக்கம் சாய்ந்த 5 மாவட்ட நிர்வாகிகள்.. எடப்பாடிக்கு வந்ததே கோபம்.. ஒரே அறிவிப்பில் காலி!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரோடு இணைந்து செயல்பட்டு வந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் திரை மறைவில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணியினர், ஈபிஎஸ் அணியில் இருக்கும் நிர்வாகிகளை இழுக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு ஓரளவுக்கு பலன் கிடைத்தும் வருகிறது.
இந்நிலையில் தான், ஓபிஎஸ் தரப்போடு இணக்கமாகச் செயல்பட்டு வந்த மதுரை, வேலூர், திருச்சி, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஈபிஎஸ்.

கட்சியை விட்டு நீக்கும் படலம்
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்தாலும் எடப்பாடி பழனிசாமியை தான் கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன் என அதிரடியாக கூறிய ஓபிஎஸ் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என அனைத்து மட்டத்திலும் நியமனம் செய்து வருகிறார் ஓபிஎஸ். சமீபத்தில், ஈபிஎஸ்ஸின் கோட்டையான சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஓபிஎஸ் தரப்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

ஈபிஎஸ் அணி டூ ஓபிஎஸ்
ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணியில் சேர்ந்தவர்களுக்கு அங்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ள. இந்நிலையில், தனது அணியில் இருந்து தாவிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட 12 பேரை கட்சியிலிருந்து நேற்று நீக்கினார் ஈபிஎஸ். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெங்கடாச்சலம், கோவிந்தராஜ் உள்ளிட்டோரும், முக்கிய நிர்வாகிகளும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.

ஈபிஎஸ் அதிரடி
இந்நிலையில் இன்று வேலூர், திருச்சி, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவர்கள் ஓபிஎஸ் தரப்போடு இணக்கமாக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதால் கீழ்க்கண்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

5 மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்
வேலூர் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் சி.கே.எம். நித்தியானந்தம். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரா.அழகேசன், ஈரோடு மாநகர் மாவட்டத்தை சேர்ந்த கோவை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணை செயலாளர் எம்.ரமணி காந்த், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் ஆர்.கே.ஜி (எ) கார்த்திக், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.செல்வராஜ், வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இ.அழகானந்தம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய நிர்வாகிகளை தூக்கிய ஓபிஎஸ்
மேலும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் ஆர்.ராமமூர்த்தி, மேலூர் நகர செயலாளர் எஸ்.ஏ.ஏ. பாஸ்கரன், மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணை செயலாளர் ஜி.கருப்பணன், திருப்பரங்குன்றம் மேற்கு பகுதி அவைத் தலைவர் கவிஞர் பா.சேகர், திருப்பரங்குன்றம் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.லெட்சுமிபதி ராஜன், திருப்பரங்குன்றம் பகுதி முன்னாள் துணைச்செயலாளர் பாலமுருகன் ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என எடப்பாடி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications