டெல்லி பார்வையை திருப்ப ஈபிஎஸ் ஏவும் அஸ்திரம்.. எடப்பாடியின் சீக்ரெட் பிளான்.. 2 பேர் காலி? ஆஹா!
சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை வைத்தே, ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிரான அஸ்திரங்களை டெல்லியில் அடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில், சசிகலா, ஓபிஎஸ் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருப்பதால், அவர்களை சேர்ப்பது நமக்கு சிக்கல் தான் என டெல்லி காதில் போட்டு வைக்க ஈபிஎஸ் பிளான் போட்டு வருகிறாராம்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் - தினகரன் - சசிகலா ஆகியோர் இணைவது பாஜகவின் விருப்பமாக இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த முயற்சி பலன்களை ஏற்படுத்தும் என ஈபிஎஸ் தரப்பினர் கூறுகின்றனர்.

ஈபிஎஸ் பரபர ஆலோசனை
ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கைகளை வாசித்த எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். அதன்படி, அடுத்தகட்டமாக சில அதிரடி நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிசாமி இறங்க இருப்பதாக ஈபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பாஜக விருப்பம்
2024 தேர்தலைக் குறிவைத்துள்ள பாஜக தலைமை, அதிமுகவில் நிலவி வரும் மோதலை விரும்பவில்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா ஆகியோர் இணைய வேண்டும் என டெல்லி பாஜக தலைமை விரும்புகிறது. எடப்பாடி பழனிசாமி இதை ஏற்காமல் முரண்டு பிடித்து வருவதால், விட்டுப் பிடிக்க நினைத்துள்ளது பாஜக. இந்நிலையில் தான் ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிரான ஆறுமுகசாமி அறிக்கையை முன்வைத்து காய் நகர்த்த திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.

அவர்களால் சிக்கல் தான்
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை வைத்து, பாஜகவை மீண்டும் அணுக ஈபிஎஸ் தயாராகி இருக்கிறாராம். இந்த அறிக்கை சசிகலா, ஓபிஎஸ் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைத்திருப்பது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை கட்சியில் சேர்த்திருந்தால் இன்னும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என பாஜக தலைமையிடம் எடப்பாடி பழனிசாமி பேச இருக்கிறாராம்.

ஓபிஎஸ்ஸால் கட்சிக்கு அவப்பெயர்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பதிலேயே எனக்கு உடன்பாடு இல்லை, ஓபிஎஸ் அழுத்தத்தால் தான் ஆணையத்தை அமைத்தோம். இப்போது, அந்த ஆணையத்தால் அதிமுகவுக்குத்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ்ஸின் ஒவ்வொரு நடவடிக்கையுமே இப்படி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகத்தான் அமைக்கிறது. அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ் மீது கடுமையான அதிருப்தி நிலவுகிறது என ஈபிஎஸ் டெல்லியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறாராம்.

நிலைமை மோசமா இருக்கு
ஓபிஎஸ், சசிகலா மீது ஜெ. மரண விவகாரத்தில் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருப்பதால் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவர்கள் மீது கொதிப்பில் இருக்கின்றனர். அவர்களைச் சேர்ப்பது நமக்கு பெரிய ஆபத்தாகவே முடியும். நீங்களே வேண்டுமானாலும், தமிழகத்தில் ஓபிஎஸ், சசிகலா மீது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற ரிப்போர்ட்டை பெற்றுப் பாருங்கள் என டெல்லியில் ஈபிஎஸ் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.

பலே பிளான்
இந்த அறிக்கையால் ஓபிஎஸ், சசிகலா மீது அதிருப்தி நிலவுவதாக டெல்லிக்கு தெரியப்படுத்துவதன் மூலம், அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் இருந்து பாஜக இறங்கி வந்து தனது முடிவை பரிசீலிக்கும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்காக இருக்கிறது. பாஜக தனது முடிவில் இருந்து இறங்கி வந்தால், ஓபிஎஸ், சசிகலா அரசியலை காலி செய்து விடலாம் என எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனையில் பேசியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications