குவார்ட்டர், செமி.. ‘ஞாபகம் இருக்கா?’ - ஃபைனலும் எடப்பாடி பழனிசாமி தான்.. ஈபிஎஸ் டீம் போடும் கணக்கு!
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது ஈபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், ஏற்கனவே நடந்த 2 வழக்குகளை சுட்டிக்காட்டி, ஃபைனலிலும் வெற்றி எங்களுக்குத்தான் என்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்.
குவார்ட்டர்ஸ், செமி ஃபைனல் என உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நடந்த 2 வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான முடிவுகளே வந்தன, அதனால் ஃபைனலிலும் அவரே வெல்வார் என்கின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வரும் நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தான் இறுதி வாய்ப்புகளாக இருக்கின்றன.
இந்நிலையில் தான், உச்ச நீதிமன்றத்தில் எங்கள் கையே ஓங்கும் என்பதற்கான பாயிண்டுகளை அடுக்குகிறார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.
வடகிழக்குப் பருவமழை.. இயல்பை விட கூடுதலாக கொட்டித்தீர்க்குமாம்.. தமிழகத்தில் மழை எப்படி?
ஜூனில் ஆரம்பித்த கலகம்
ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு முன்னர் ஓபிஎஸ் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழுவை கூட்டலாம் என உத்தரவிடப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்து விடியற்காலையில் தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றார். அதன்படி, பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களைக் கொண்டு வரக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி தரப்பால், அந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றவில்லை.
கால் இறுதி
இதையடுத்து, ஈபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றபோது, அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான முடிவே கிடைத்தது. அரசியல் கட்சிகளுக்குள்ளே ஏற்படும் பிரச்சனைகளை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உத்தரவிட முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்ற உத்தரவின் சாராம்சமாக இருந்தது. அதுவே, எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. அதையொட்டி வழக்கு மீண்டும் ஐகோர்ட்டுக்கு போனபோது, ஜூலை 11ல் பொதுக்குழுவை நடத்த அனுமதி கிடைத்தது.
செமி ஃபைனல்
அடுத்து, அதிமுக அலுவலக சாவி ஐகோர்ட் உத்தரவு மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் ஓபிஎஸ். அதிமுக அலுவலக சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தனர். இது எடப்பாடிக்கு உச்ச நீதிமன்றத்தில் கிடைத்த இரண்டாவது வெற்றி.
மூன்றாவது முறையாக
உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவதாக இந்த பொதுக்குழு மேல்முறையீடு சென்றிருக்கிறது. இதில், தற்போது பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்ற உத்தரவு தான் வந்திருக்கிறதே தவிர, பொதுக்குழு தொடர்பாகவோ, கட்சியின் உரிமை தொடர்பாக, இன்னும் நீதிபதிகள் விசாரணைக்குள் இறங்கவே இல்லை.
எல்லாம் மாறும்
ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் இரு முறை தனக்கு சாதகமான உத்தரவுகளைப் பெற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால், அவரது தரப்பின் பலத்தை உச்ச நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது என்றே கருதலாம். இதனால், தசரா விடுமுறைக்குப் பிறகு வழக்கு விசாரணை நடைபெறும்போது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான பலன்கள் ஏற்படும் என்கிறார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.
ஃபைனல் மேட்ச்
ஃபைனல் மேட்ச்சிலும் எடப்பாடி பழனிசாமியே ஜெயிப்பார் என்கிறார்கள் அவரது தரப்பினர். உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என மாறி மாறி இதுவரை தீர்ப்புகள் வந்திருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரை ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமியின் கை தான் ஓங்கியது. இதனால், இந்த முறையிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பே கிடைக்கும், அதிமுக பொதுச் செயலாளராகவும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர் ஈபிஎஸ் தரப்பினர்.