சவுத்தில் சிக்கலா? சைலண்டாய் காய் நகர்த்தும் எடப்பாடி & கோ! ஓபிஎஸ்ஸோ ’கப்சிப்’! என்னதான் நடக்குது?
சென்னை : அதிமுகவில் கடந்த சில நாட்களில் தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்திருப்பதாக தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வழியாக இருக்கிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இடையேயான அதிகார மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பது அவர்களுக்கே தெரியாது போல.. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் திருப்பங்களையும் ஆதரவு வட்டாரம் அதிகரிப்பது சரிவது என மாறி மாறி நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.

அதிமுக விவகாரம்
ஒருபுறம் நிர்வாகிகள் ஆதரவு தனக்குத்தான் இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும், தொண்டர்கள் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வமும் கூறிவரும் நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை பொருத்தவரை தேர்தல் ஆணையத்தின் முடிவு இறுதியாக இருக்கும் என்பதால் அது தொடர்பாகவும் இழுபடி நீடிக்கிறது.

ஓபிஎஸ் செல்வாக்கு
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை பெருக்கிக் கொள்ளும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை பயன்படுத்திக் கொண்டார் ஓபிஎஸ். முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா அளித்தது போலவே வெள்ளியில் கவசம் அணிவித்தார். மேலும் அதை தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடமே வழங்கி அதனை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வழங்கியிருக்கிறார். தற்போது இந்த விவகாரம் முக்குலத்தோர் சமுதாயத்தினர் இடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி அட்வைஸ்
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் இதனால் அதிர்ச்சியில் இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு வட்டம் குறைந்து வருவது போல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை அறிந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அவசரப்பட்டு இது குறித்து எதுவும் பேசிவிட வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். குறிப்பாக தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசிவரும் எடப்பாடி பழனிச்சாமி இதுபோன்ற தகவல்களை பரப்புவது யார் என விசாரிக்கும்படி கூறியிருக்கிறார்.

முக்கிய திட்டம்
மேலும் ஓபிஎஸ் தரப்பை தொடர்பு கொண்டு யாரும் பேசியிருக்கிறார்களா என்பதையும் கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ள எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் சமீபத்தில் இணைந்த தென்காசி அய்யாதுரை பாண்டியன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை வைத்து அசைன்மென்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதாவது வரும் காலங்களில் பசும்பொன் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் அது மட்டுமல்லாது ஆதரவு வட்டம் குறைவது போல இருக்கும் மாவட்டங்களில் தானே நேரடியாக சென்று ஆலோசனை கூட்டங்களை நடத்துவது பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களில் பங்கேற்பது என அதிரடி வியூகத்தை கையில் எடுத்திருக்கிறார். இதனால் ஓபிஎஸ் தரப்பு சற்று அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் உற்சாகம் அடைந்திருக்கிறது எடப்பாடி தரப்பு. வரும் நாட்களில் அதிமுக தொடர்பான நிகழ்வுகள் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications