"அந்தம்மா" 2 பேருகிட்ட பேசுறது ஒரு மேட்டரா? ஆவேசமான எடப்பாடி பழனிச்சாமி.. "அணில்" பற்றியும் காட்டம்
சென்னை: அதிமுக நிர்வாகிகளுடனான, சசிகலாவின் தொலைபேசி பேச்சுக்கள் மற்றும் அணில் தாவுவதால் மின்வெட்டு ஏற்படுவதாக கூறிய செந்தில் பாலாஜி ஆகிய இரு விஷயங்கள் குறித்தும், காட்டமாக பதிலளித்துள்ளார், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
சேலம், ஓமலூரில் இன்று, நிருபர்களுக்கு பேட்டியளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, அவர் கூறியதை பாருங்கள்:
சசிகலா அதிமுகவில் இல்லை. ஊடக நண்பர்களும் பத்திரிக்கை நண்பர்கள்தான் சசிகலா விஷயத்தை பெரிதுபடுத்தி செய்தி போட்டு கொண்டு இருக்கிறீர்கள். எவ்வளவோ விஷயங்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது அதை ஊடகங்கள் வெளியிடுவது கிடையாது.

சசிகலா விஷயம் பற்றி கவலையில்லை
தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. அதை ஊடகத்தில் காட்டுவது கிடையாது. மக்களுடைய பிரச்சினையே நிறைய இருக்கிறது, அதை காட்ட வேண்டும். சசிகலாவுக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறீர்கள். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த அம்மா யாரோ ஒருவர், இருவரிடம் போனில் பேசுகிறார். அதை தினந்தோறும் ஊடகத்தில் காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். அதிமுகவுக்கும், அந்த அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் 10 பேர் மட்டும் அல்ல, ஆயிரம் பேரிடம் வேண்டுமானாலும் அவர் போனில் பேசிக் கொள்ளட்டும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை கிடையாது.

அணிலை காட்டுகிறார்
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உண்மைக்கும் வெகு தூரம். மின்சார தட்டுப்பாடுகளுக்கு, அணில் காரணம் என்கிறார் அமைச்சர். ரொம்ப அதிசயமாக இருக்கிறது. அந்த பிரச்சினை பற்றிய கேள்வி எழுப்பினால் இரண்டு அணிலை பிடித்து போட்டோ காட்டுகிறார். யாராவது விளக்கம் சொன்னால் அவர்கள் மீது பழி சுமத்துகிறார்.

மக்கள் விழிப்புணர்வோடு உள்ளார்கள்
எங்களது ஆட்சியிலும் ஒரு விபத்துக்கு அணில் காரணமாக இருந்தது. ஆனால், அணில் ஏதோ ஒரு பகுதியில்தான், ஏறி விளையாடும். தமிழ்நாடு முழுக்கவுமா கரண்ட் கம்பியில் ஏறிக்கொண்டு இருக்கும். நாட்டு மக்கள் எல்லோரும் இப்போது விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தில் முன்னேறிய நிலைக்கு சென்று விட்டார்கள். பேட்டி அளிக்கும் போது அதை நேரலையாக ஒளிபரப்பு செய்து மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கிறீர்கள். இந்த விஞ்ஞான உலகத்தில் நாம் இருக்கிறோம். இப்போது வந்து, அணில் ஏறி போனது என்று சொல்வதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

சரி செய்யும் வழியை பார்க்க வேண்டும்
ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக்கொண்டு இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. பிரச்சனை எங்கே இருக்கிறது அதை எப்படி சரி செய்யலாம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்ய வேண்டுமே தவிர ஏதாவது ஒன்றைச் சொல்லி தப்பிக்க கூடாது. ஏனென்றால் மின்சாரம் என்பது மக்களுக்கு அத்தியாவசியத் தேவை. இதை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.

மின் வாரிய செலவு
நீண்ட காலமாக தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. இன்னொருபக்கம் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரித்துள்ளது, மின் கம்பிகள், மின் கோபுரம் அமைக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தின் விலையும் அதிகரித்துள்ளது. எனவே மின்சார துறையில் அதிக செலவீனம் ஆகியிருக்கும். அதை இப்போது சுட்டிக்காட்டி பலன் கிடையாது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications