பதறிப்போன பன்னீர் ஆதரவு மாசெ.. பதவியைப் பிடிக்க முட்டி மோதும் நிர்வாகிகள்.. ஆனா எடப்பாடி கணக்கே வேற!
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் நாற்காலியை எடப்பாடி பழனிசாமி நெருங்கி வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வகித்து வரும் பதவிகளைப் பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே பெரும் அடிதடியே நடப்பதாகக் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருக்கும் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என்பதால் அப்பதவிகளைப் பெற ஈபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை கேட்டு வருகின்றனராம்.
இன்னும் பொதுக்குழுவே நடைபெற்று, தான் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படாத நிலையில், தனது ஆதரவாளர்களின் நெருக்கடியால் ஈபிஎஸ் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது.
திடீரென மாறிய அரசியல் கிளைமேட்.. எடப்பாடியை "சுற்றிலும்" வைக்கப்படும் குறி.. என்ன நடக்கிறது?
பதவிகளுக்கு குறி
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினால், துணை பொதுச் செயலாளர், பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளைக் கைப்பற்றுவதற்கு அதிமுகவில் பெரும் போட்டியே நடக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் பலர் இதற்காக முட்டி மோதி வருகின்றனர். எனினும், எடப்பாடி பழனிசாமி இதுவரை அந்தப் பதவிகளுக்கு யாரை கொண்டுவருவது என முடிவெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பொதுச் செயலாளரான பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி வருகிறாராம்.
ஓபிஸ் ஆதரவு நிர்வாகிகள்
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நிற்கிறார். தேனி மாவட்ட செயலாளர் சையது கான், திருச்சி மாநகர் மா.செ வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மா.செ ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். ஈபிஎஸ் பொதுச் செயலாளர் ஆனால், இவர்களது பதவிகளும் பறிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பெரம்பலூர் மா.செ
பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இருக்கும் ராமச்சந்திரனின் பதவியைப் பிடிக்க இப்போதே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் துண்டு போடத் தொடங்கிவிட்டனராம். ஓபிஎஸ் ஆதரவாளரான ராமச்சந்திரன் எடப்பாடிக்கு எதிராக இருப்பதால் அவரது பதவி தங்களுக்கு வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் பலர் காய்நகர்த்தி வருகின்றனராம். இதனால் மா.செ ராமச்சந்திரன் பதறிப் போய் இருக்கிறார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலரும் பதவி பெறும் ரேஸில் முன்னணியில் இருக்கின்றனராம்.
ஈபிஎஸ் கணக்கு
ஆனால், எடப்பாடி பழனிசாமி இதில் அவசரம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. காரணம், கட்சி முழுமையாக தன் கையில் வந்துவிட்டால், ஓபிஎஸ் ஆதரவாளர்களை தன் பக்கம் இழுத்துவிடலாம் என்பதால் பதவியைப் பறிக்கத் தேவையிருக்காது என்கிற கணக்கில் இருக்கிறார். இதனால் இதுகுறித்து மாவட்டங்களில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு மையமாக தலையாட்டி வைக்கிறாராம்.
Recommended Video
நம்பிக்கையூட்டும் ஓபிஎஸ்
அதேநேரம், ஓபிஎஸ் தரப்பு, நிர்வாகிகள் யாரும் தங்கள் பதவி பறிபோகும் என அஞ்ச வேண்டாம், சட்ட விதிகள் நமக்கு சாதகமாகவே இருக்கின்றன. நம்பி வந்திருக்கும் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. முக்கிய பதவிகள் வழங்கப்படும், ஈபிஎஸ் தரப்பின் தூண்டிலில் சிக்கிவிடக் கூடாது என ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. யாருடைய எண்ணம் நிறைவேறும் என்பது ஜூலை 11ஆம் தேதிக்குப் பிறகே தெரியவரும்.