‘2 மேட்டர்’.. சீக்ரெட் மீட்டிங்.. டெல்லி தலைமையுடன் நெருங்கும் ஈபிஎஸ்- தூது போன 2 தலைகள்! என்னாச்சு?
சென்னை : எடப்பாடி பழனிசாமி அணியின் முக்கிய 'புள்ளிகள்' இருவர் சமீபத்தில் டெல்லியில் முகாமிட்டு சில முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் நிலவி வரும் மோதல் சூழலில், பாஜக தலைமையின் ஆதரவைப் பெறுவது யார் என்பதில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பெரும் போட்டியே நடந்து வருகிறது.
பாஜக தலைமை, தங்களுக்கு வசதியாக ஓ.பன்னீர்செல்வத்தை நினைத்தாலும், நிர்வாகிகளின் செல்வாக்கு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால் வெளிப்படையாக எந்த ஆதரவையும் தெரிவிக்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, தனக்கு நெருக்கமான 'மணி'யான மாஜிக்கள் இருவரை டெல்லிக்கு அனுப்பியதாகவும், அங்கு அவர்கள் சில மேலிட புள்ளிகளை சந்தித்துவிட்டுத் திரும்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக சிக்கல்கள்
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்து தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் அணி.

டெல்லி ஆதரவு யாருக்கு?
டெல்லியின் ஆதரவைப் பெறுவதில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெரும் போராட்டமே நடந்து வருகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே தலா ஒரு முறை டெல்லி சென்று திரும்பியுள்ளனர். பிரதமர் மோடி சென்னை வந்தபோதும் இருவரும் தனித்தனியாகச் சந்திக்க முயன்றனர். பிரதமர் சென்னை வந்தபோது ஓபிஎஸ்ஸுக்கே கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்ததாகப் பார்க்கப்பட்டது.

டெல்லி லாபி
மேலும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சிலரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதற்குப் பின்னணியிலும் டெல்லியின் கை இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டது. இதற்காகவே டெல்லியில் முட்டி மோதிப் பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. எம்.பிக்களும், அங்கு மேலிட புள்ளிகளிடம், எடப்பாடி தரப்பு தகவலைக் கொண்டு சேர்த்த வண்ணம் இருந்தனர்.

ரவீந்திரநாத்
ஓபிஎஸ் மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களிடம் தொடந்து தொடர்பில் இருந்து, தங்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முயன்றார். அதற்கு, டெல்லியின் கண்ணசைவும் கிடைத்திருப்பதாகவே கூறப்பட்டது. டெல்லியின் சைகையைத் தொடர்ந்தே, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைவதற்கான வேலைகளைத் தீவிரப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மணியான புள்ளிகள்
இந்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான இரண்டு மணியான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் முகாமிட்டு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய புள்ளிகள் சிலரைச் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பு, ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

பியூஷ் கோயல்
கடந்த அதிமுக ஆட்சியின்போது, எடப்பாடி பழனிசாமிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றங்களுக்கான பாலமாகச் செயல்பட்டவர் பியூஷ் கோயல். இப்போது பிரதமர் மோடியைச் சந்திக்க முடியாததால், அவர் மூலமாகவே சில விஷயங்கள் தொடர்பாக காய் நகர்த்துவதற்கு ஈபிஎஸ் திட்டமிட்டு அந்த 2 புள்ளிகளையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார் என்கிறார்கள்.

நெருக்கும் வழக்குகள்
எடப்பாடி பழனிசாமி, அவர்களை டெல்லிக்கு அனுப்பியது, ஓபிஎஸ்எஸுக்கு எதிரான மோதல் விவகாரம் தொடர்பாகவா அல்லது, ஈபிஎஸ் மற்றும் அவரது தரப்பு மாஜிக்களை நெருக்கும் வழக்குகளில் இருந்து ரிலீஃப் பெறுவது தொடர்பாகவா என்பது தெரியவில்லை என்றும் கிசுகிசுக்கிறார்கள் தலைநகர் வட்டாரத்தில். காரணம், டெல்லி சென்ற இருவருமே இந்த வழக்கு சிக்கல்களில் சிக்கியிருப்பவர்கள் தான்.












Click it and Unblock the Notifications