இயற்கை உணவுகளை தந்து சின்னதம்பியை ஏன் காட்டுக்கே திரும்ப அனுப்ப கூடாது.. ஹைகோர்ட் கேள்வி
சின்னதம்பி யானை குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது,
Recommended Video
சென்னை: இயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோவை சின்ன தடாகத்தில் கடந்த 28-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை மீண்டும் ஊருக்குள் ஊடுருவி வந்துவிட்டது.
எனவே சின்னத்தம்பியின் அட்டகாசம் நாளை பெருகிவிட்டால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால், அதனை கும்கியாக மாற்ற போவதாக தமிழக வனத்துறை அறிவித்திருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது.
எண்ணம் இல்லை
இதனால் சின்னதம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசாத் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் முறையீடு செய்தார். மேலும் யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது பற்றி விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அருண் பிரசாத் முக்கிய கோரிக்கையாக விடுத்திருந்தார். இதையடுத்து, சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் தமிழக அரசுக்கும் இல்லை, வனத்துறைக்கும் இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நல்ல தம்பி
இந்நிலையில், இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில், "சின்னத் தம்பியை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை சின்னத்தம்பியை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் இருக்கிறது. காட்டுக்குள் அனுப்புவதற்கான சூழலும் இல்லை.
நல்ல தம்பி
யானை நிபுணர் தேசாஜி, சின்னதம்பி சாதுவாகி விட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே சின்னதம்பி நல்ல தம்பி ஆகிவிட்டதால் யானை முகாமிலேயே வைத்து பராமரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது சம்பந்தமான வழக்கின் விசாரணையை இன்றைய தினத்துக்கும் ஹைகோர்ட் ஒத்தி வைத்தது.
இயற்கை உணவுகள்
அதன்படி இன்று காலை இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. சின்னதம்பியின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பியை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்கள். மேலும் சின்னத்தம்பியை முகாமுக்கு அனுப்புவது தொடர்பான அறிக்கையை நாளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாளை ஒத்தி வைப்பு
இதையடுத்து, யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நாளை கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.